Advertisment

14 டி.வி தொகுப்பாளர்கள் புறக்கணிப்பு: 'எமர்ஜென்சி 2.0' - இந்தியா கூட்டணி மீது ஊடக குழு, பா.ஜ.க தாக்கு

"வெறுப்பு நிறைந்த" செய்தி விவாதங்களை நடத்தும் 14 தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் விவாத நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
INDIA alliance blacklist 14 TV anchors

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எதிர்க்கட்சி கூட்டணியின் முடிவை "எமர்ஜென்சி 2.0" என்று விமர்சித்துள்ளார்.

india | bjp | congress: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்தும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க. உள்பட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. 'இந்தியா' என்று பெயரிடப்பட்ட இக்கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள், பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்துள்ளன. பல்வேறு பிரச்சினைகளை ஆராய 14 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

Advertisment

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதலாவது கூட்டம் நேற்று நடந்தது. டெல்லியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் இக்கூட்டம் நடந்தது. 14 உறுப்பினர்களில் 12 பேர் மட்டும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாநிலவாரியாக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஜனநாயக விரோதம் மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என்று விமர்சிக்கப்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையாக, எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா, நேற்று 14 தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. அவர்கள் "வெறுப்பு நிறைந்த" செய்தி விவாதங்களை நடத்துவதாகவும் அவர்கள் நடந்ததும் விவாத நிகழ்ச்சியை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறியது.

11 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் இந்தியக் கூட்டணி, நியூஸ் 18 இன் அமன் சோப்ரா, அமிஷ் தேவ்கன் மற்றும் ஆனந்த் நரசிம்மன் ஆகியோர் இடம்பெறும் நிகழ்ச்சிகளுக்கு அதன் பிரதிநிதிகளை அனுப்ப மாட்டோம் என்று கூறியுள்ளது. ஆஜ் தக்கின் சித்ரா திரிபாதி மற்றும் சுதிர் சவுத்ரி; இந்தியா டுடேயின் கௌரவ் சாவந்த் மற்றும் ஷிவ் அரூர்; இந்தியா டி.வி-யின் பிராச்சி பராஷர்; ரீபப்லிக் பாரதத்தின் அர்னாப் கோஸ்வாமி; பாரத் 24-இன்   ரூபிகா லியாகத் ; டைம்ஸ் நவ் நவ்பாரத்தின் நவிகா குமார் மற்றும் சுஷாந்த் சின்ஹா; பாரத் எக்ஸ்பிரஸ் அதிதி தியாகி; மற்றும் டிடி நியூஸின் அசோக் ஸ்ரீவஸ்தவ் ஆகியோரின் விவாத நிகழ்ச்சியை புறக்கணிக்க இருப்பதாக இந்தியா கூட்டணி தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், பெயர் குறிப்பிட விரும்பாத இந்தியா கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளின் தலைவர்கள், இந்த நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தனர் மற்றும் தங்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர். 

இந்த முடிவைப் ஆதரவாக பேசியுள்ள காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் பவன் கேரா, “ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு, சில சேனல்களில் வெறுப்பு சந்தை போடப்படுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. வெவ்வேறு கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் அந்த சந்தைகளுக்குச் செல்கிறார்கள், சில நிபுணர்கள் செல்கிறார்கள், சில ஆய்வாளர்கள் செல்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் அந்த வெறுப்பு சந்தையின் வாடிக்கையாளர்களாக செல்கிறோம்.

கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த அறிவிப்பாளர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்த அறிவிப்பாளர்களை நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் நாங்கள் நம் நாட்டை அதிகம் நேசிக்கிறோம். அதனால்தான் இந்த வெறுப்புக் கடைகளை மூட எங்கள் தரப்பில் இருந்து முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க விரும்புகிறோம்.. அதனால்தான் இந்தியக் கூட்டணியின் உறுப்பினர்கள் வாடிக்கையாளர்களாக இந்த வெறுப்பு சந்தைகளுக்குச் செல்ல மாட்டோம் என்று முடிவு செய்தனர்.

நமது சமூகத்தை சீர்குலைக்கும் இந்த வெறுப்பு நிறைந்த கதையை நாங்கள் சட்டப்பூர்வமாக்க விரும்பவில்லை. வன்முறையின் வடிவத்தை எடுக்கும் சமூகத்தில் வெறுப்பைப் பரப்பினால், நாங்கள் அதில் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம்," என்று கூறினார். 

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் இந்த முடிவுக்கு நியூஸ் ப்ராட்காஸ்டர்கள் மற்றும் டிஜிட்டல் அசோசியேஷனை (NBDA) சேர்ந்த ஊடகவியாளர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்துள்ள ஆளும் பா.ஜ.க அரசும் எதிர்க்கட்சி கூட்டணியைத் தாக்கிப் பேசி வருகிறது. காங்கிரஸ் கொண்டுவந்த எமர்ஜென்சி (நெருக்கடி நிலை) காலத்தை நினைவூட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளது. 

“இது ஊடகங்களின் வாயை அடைப்பது போன்றது. உண்மையில், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பேச்சு சுதந்திரத்தை பிரச்சாரம் செய்யும் கூட்டணி இந்த நடவடிக்கையின் மூலம் அதை குறைக்கிறது. ஆனால் நாங்கள் அனைவரையும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தொடர்ந்து அழைப்போம், ”என்று நியூஸ் பிராட்காஸ்டர்ஸ் & டிஜிட்டல் அசோசியேஷன் (என்பிடிஏ) தலைவரும், ஏபிபி நெட்வொர்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி அவினாஷ் பாண்டே இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். 

என்.பி.டி.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த முடிவால் 'ஆழ்ந்த வேதனை மற்றும் கவலை' ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைக்கிறது என்று வாதிட்டது. இந்தியாவின் சில முக்கிய தொலைக்காட்சி செய்தி ஆளுமைகள் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளில் பங்கேற்க எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதிநிதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஜனநாயகத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது. இது சகிப்பின்மையைக் குறிக்கிறது மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்கிறது. 

எதிர்க்கட்சி கூட்டணி பன்மைத்துவம் மற்றும் சுதந்திரமான பத்திரிகையின் வெற்றியாளர் என்று கூறுகிறது, ஆனால் அதன் முடிவு ஜனநாயகத்தின் மிக அடிப்படையான கொள்கையையும் கருத்துக்களையும் வெளிப்படையாக வெளிப்படுத்தும் பிரிக்க முடியாத உரிமையை கடுமையாக புறக்கணிக்கிறது. 

சில பத்திரிக்கையாளர்களை புறக்கணிப்பது தேசத்தை மீண்டும் எமர்ஜென்சி காலகட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. அப்போது தான் பத்திரிகைகள் வாயை மூடிக்கொண்டு, சுதந்திரமான கருத்துக்கள் மற்றும் குரல்கள் நசுக்கப்பட்டன. சில பத்திரிக்கையாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்களை புறக்கணிக்கும் முடிவை திரும்பப் பெறுமாறு எதிர்க்கட்சி கூட்டணியை என்.பி.டி.ஏ  வலியுறுத்துகிறது." என்று கூறியது. 

இது குறித்து தூர்தர்ஷனின் தொகுப்பாளர் அசோக் ஸ்ரீவஸ்தவ் பேசுகையில்“48 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திராஜியின் அவசரநிலைக்கு எதிராக எனது தந்தை குரல் எழுப்பினார், பின்னர் காங்கிரஸ் அரசாங்கம் எனது தந்தைக்கு எதிராக மிசா (MISA) வாரண்ட் பிறப்பித்தது. ஆனால், என் தந்தை பயப்படவும் இல்லை, இந்திராவிடம் மன்னிப்பு கேட்கவும் இல்லை. இன்று, எதிர்க்கட்சிகள் நாட்டில் 2.0 அவசரநிலையை விதிக்க விரும்புகின்றன... இன்றும் நாம் போராட வேண்டும், பயப்பட வேண்டாம்." என்று கூறினார். 

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க தலைவர் ஜே பி நட்டா பேசுகையில், "இந்தியா கூட்டணி யாரை குறிவைப்பது என்ற உண்மையான நாஜி பாணியில் பட்டியலை உருவாக்குகிறது. இந்தக் கட்சிகளிடையே அவசரகால மனநிலை உயிருடன் உள்ளது. 

பண்டிட் நேரு பேச்சு சுதந்திரத்தை குறைத்து, தன்னை விமர்சித்தவர்களை கைது செய்தார். இந்திரா ஜி அதை எப்படி செய்வது என்பதில் தங்கப் பதக்கம் வென்றவர் - உறுதியான நீதித்துறை, உறுதியான அதிகாரத்துவம் மற்றும் பயங்கரமான அவசரநிலையை திணித்தார். ராஜீவ் ஜி ஊடகங்களை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றார். ஆனால் படுதோல்வி அடைந்தார். சோனியா ஜி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, காங்கிரஸ் அவர்களின் கருத்துகளை விரும்பாத காரணத்தால் சமூக ஊடகக் கையாளுகைகளைத் தடை செய்தது, ”என்று அவர் கூறினார்.

பா.ஜ.க தேசிய ஊடகத் தலைவர் அனில் பலுனி தனது அறிக்கையில், அத்தகைய "மிகவும் வருந்தத்தக்க" முடிவை எடுத்ததன் மூலம், அதன் "அதிக அடக்குமுறை, சர்வாதிகார மற்றும் எதிர்மறையான மனநிலையை" மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறினார். கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்கும் இத்தகைய இழிவான மனநிலையை பாஜக எதிர்க்கிறது என்றார்.

"எமர்ஜென்சியின் போது ஊடகங்கள் எவ்வாறு திணறடிக்கப்பட்டன மற்றும் வாய்மூடித்தனமாக இருந்தன என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்," என்று பாலுனி கூறினார், இந்த நடவடிக்கை "இந்திய ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை காயப்படுத்த சில வெளிப்புற அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறது" என்பதை இந்த நடவடிக்கை சுட்டிக்காட்டுகிறது. நாட்டில் ஜனநாயகம் உள்ளது என்றும், ஊடக சுதந்திரம் மற்றும் உரிமைகளை நசுக்கவோ, குறைக்கவோ யாரையும் அனுமதிக்க முடியாது என்றார்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எதிர்க்கட்சி கூட்டணியின் முடிவை "எமர்ஜென்சி 2.0" என்று விமர்சித்துள்ளார். 

“ஜனநாயகத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை இது காட்டுகிறது... வங்காளத்தையும், தமிழகத்தையும்... மற்ற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களையும் பாருங்கள்... பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன... இப்போது அவர்கள் அவர்களைப் புறக்கணிப்பது பற்றிப் பேசுகிறார்கள்... வெட்கக்கேடானது. கருத்துச் சுதந்திரம் மற்றும் ஊடகங்களின் சுயாட்சி... இன்று அவை மிகப் பெரிய உதாரணம் ஆகிவிட்டன... ஊடகங்களை நசுக்கவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ யாரேனும் முயன்றால் அது காமந்தியா கூட்டணிதான்" என்று அவர் கூறினார். 

மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி இந்த நடவடிக்கையை ஊடக உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால காலத்துடன் ஒப்பிட்டார். "1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சியின் போது இந்தியாவில் குடிமக்கள் உரிமைகள் குறைக்கப்பட்டதை நாங்கள் கண்ட ஒரே நிகழ்வு.  சனாதன தர்மத்தை ஒழிப்பதற்கான வெளிப்படையான அழைப்புகள், பத்திரிகையாளர்களுக்கு எதிரான எஃப்ஐஆர்கள் மற்றும் ஊடகப் புறக்கணிப்பு ஆகியவை அந்த இருண்ட கால நெருக்கடியின் அரசியலைப் பிரதிபலிக்கின்றன. ஐ.என்.டி.ஐ.கூட்டணியின் உண்மை முகம்”
என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Bjp India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment