படித்த இளைஞர்கள் வேலையில்லை என, சொல்லக்கூடாது. அவர்கள் கறவை மாடுகள் வளர்த்து மினி பால் பண்ணை வைக்க வேண்டும். கிராம பகுதி மட்டுமின்றி நகர பகுதியில் படித்த இளைஞர்களும் குறைந்த அளவில் மாடுகளை வளர்த்து வருமானத்தை ஈட்ட வேண்டும். இதனால், பால் உற்பத்தியையும் பெருக்க முடியும் என்று கடந்த 23-ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியிருந்தார்.
புதுச்சேரி முதல்வரின் கருத்துக்கு இளைஞர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து இந்தியா கூட்டணி மாணவர் - இளைஞர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் எழிலன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் முதல்வரின் கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி 30-ம் தேதி சட்டப்பேரவை நோக்கி பேரணி நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் முருகன், மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.