/indian-express-tamil/media/media_files/2025/05/10/XdumutZXUmyQTPDIcjt7.jpg)
இந்தியாவும் பாகிஸ்தானும் நீண்ட காலமாக எல்லைப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (மே10) மாலை 5 மணி முதல் நிலம், வான் மற்றும் கடல் வழியாக எந்தவிதமான துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று இரு நாடுகளும் திடீரென ஒரு முக்கிய பரஸ்பரம் முடிவை எடுத்துள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: India and Pakistan decide to ‘stop all firing, military action’ from land, air and sea
இது குறித்து, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் (DGMO) இந்திய ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநரை பிற்பகல் 3.35 மணிக்கு தொலைபேசியில் அழைத்துப் பேசினார். இந்த உரையாடலின் முடிவில், இரு தரப்பினரும் தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். மேலும், இந்த விவகாரம் குறித்து மே 12-ம் தேதி நண்பகல் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் தனது எக்ஸ் (X) பக்கத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். "இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. எல்லா வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் உள்ள பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து செய்யும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷலில் வெளியிட்டுள்ள பதிவில்,"அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த நீண்ட இரவு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி தாக்குதல் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பொது அறிவையும் சிறந்த நுண்ணறிவையும் பயன்படுத்திய இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள். இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி" என்று அவர் கூறியிருந்தார்.
டிரம்ப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோவும் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். கடந்த 48 மணி நேரத்தில், துணை அதிபர் வான்ஸ் தான் இந்திய மற்றும் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுடன் பேசியதாக அவர் குறிப்பிட்டார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அஜித் தோவல் மற்றும் ஆசிம் மாலிக் ஆகியோர் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.
— Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2025
இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் உடனடி தாக்குதல் நிறுத்தத்திற்கும், நடுநிலையான இடத்தில் பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கவும் ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ரூபியோ கூறினார். "அமைதி பாதையைத் தேர்ந்தெடுத்த பிரதமர் மோடி மற்றும் பிரதமர் ஷெரீப் ஆகியோரின் ஞானம், விவேகம் மற்றும் ராஜதந்திரத்தை நாங்கள் பாராட்டுகிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்திய அரசு வட்டாரங்கள் இந்த தாக்குதல் நிறுத்தம் "இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாக" எடுக்கப்பட்ட முடிவு என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. "பாகிஸ்தான் டிஜிஎம்ஓ இன்று பிற்பகல் தொலைபேசி அழைப்பைத் தொடங்கினார். அதன் பிறகு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன, ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. வேறு எந்த இடத்திலும் வேறு எந்தப் பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் டார் தனது எக்ஸ் பக்கத்தில், "பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. பாகிஸ்தான் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்காமல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட எப்போதும் பாடுபட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக, ரூபியோவுடன் தொலைபேசியில் உரையாடிய ஜெய்சங்கர், இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் நிதானமாகவும் பொறுப்புடனும் இருப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.