கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் அதற்கு பதிலடி கொடுத்தது. இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து, ஈரான் தலைநகரில் இருந்து மக்கள் வெளியேறும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய குடிமக்களை அறிவுறுத்தி உள்ளன. இதன் ஒரு பகுதியாக ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் கீழ் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
முதற்கட்டமாக, ஈரானில் இருந்து, 110 இந்திய மாணவர்கள் கடந்த வியாழக்கிழமை டெல்லி வந்தடைந்தனர். இந்நிலையில், ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின்கீழ் 2-ம் கட்டமாக ஈரானில் இருந்து 290 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் நேற்றிரவு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர்களை மத்திய வெளிவிவகார அமைச்சக செயலாளர் அருண் குமார் சாட்டர்ஜி வரவேற்றார். மாணவர்கள், புனித யாத்திரை சென்றவர்கள் உள்பட பலரும் பாதுகாப்பாக வந்திறங்கினர்.
டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியர்கள், ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்- பாரத் மாதா கீ ஜே என முழக்கங்களை எழுப்பி நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இதுபற்றி மீட்கப்பட்டவர்களில் சிலர் கூறும்போது, விரைவாகவும், பாதுகாப்பாகவும் எங்களை சொந்த நாட்டுக்கு அழைத்து வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றனர். ஈரானில் நிலைமை நல்ல முறையில் இல்லை என்று எங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்திய தூதரகமும் மற்றும் நம்முடைய தூதரும் இந்தியர்களை வெளியேற்றும் நடைமுறையை பாதுகாப்பாகவும் மற்றும் சுமுக முறையிலும் செய்து முடித்தனர் என்று அவர்கள் கூறினர்.