/indian-express-tamil/media/media_files/2025/05/28/kZUK96TZXDU9LlSLQIk1.jpg)
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக, நாட்டின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான மேம்பட்ட நடுத்தர போர் விமானத்தின் (AMCA) திட்ட செயலாக்க மாதிரிக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஒப்புதல், உள்நாட்டு விமானத் தயாரிப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
இதுவரை, இதுபோன்ற பெரிய பாதுகாப்புத் திட்டங்களின் உற்பத்தி ஒப்பந்தங்கள் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)-க்கு நேரடியாக வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த புதிய அணுகுமுறையின்படி, எச்.ஏ.எல் (HAL) இனிமேல் ஏ.எம.சி.ஏ (AMCA) போர் விமானத்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற மற்ற தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டியிருக்கும்.
இந்த ஒப்பந்தத்தை பெற, தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ ஏலம் சமர்ப்பிக்க முடியும் என்றும், ஏலம் எடுக்கும் நிறுவனம் இந்திய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கீழ் செயல்படும் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA), இந்த விமானத்தை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. ஏ.டி.ஏ (ADA) தொழில்துறை பங்களிப்புடன் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உள்ளது. விரைவில், ஏ.எம்.சி.ஏ (AMCA) விமானத்தின் மேம்பாட்டு கட்டத்திற்கான விருப்ப அறிக்கையை ஏ.டி.ஏ (ADA) வெளியிடவுள்ளது.
In a significant push towards enhancing India’s indigenous defence capabilities and fostering a robust domestic aerospace industrial ecosystem, Raksha Mantri Shri @rajnathsingh has approved the Advanced Medium Combat Aircraft (AMCA) Programme Execution Model. Aeronautical… pic.twitter.com/28JEY123M5
— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) May 27, 2025
இது குறித்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த புதிய செயலாக்க மாதிரி, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு சமமான களத்தை அமைத்துக் கொடுக்கும். இதன் மூலம், போட்டித்தன்மையின் அடிப்படையில் சிறந்த நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி செய்யப்படும். இது, உள்நாட்டு நிபுணத்துவம், திறன் மற்றும் உற்பத்தி திறனை முழுமையாகப் பயன்படுத்த உதவும் என்றும், விண்வெளித் துறையில் 'தற்சார்பு இந்தியா' (Atmanirbharta) இலக்கை அடைவதற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக இது அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றம், பாகிஸ்தானுடனான பதட்டமான சூழ்நிலை மற்றும் சமீபத்தில் இந்திய விமானப்படை நவீன ரஃபேல் விமானங்கள் உட்பட பல்வேறு போர் விமானங்கள் மற்றும் வான்வழி ஆயுதங்கள் பங்கேற்ற 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கைக்குப் பின்னர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், பாகிஸ்தான் சீனாவிலிருந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானமான J-35 ஐ பெற்று வருகிறது. மேலும், சீனா தனது ஆறாம் தலைமுறை போர் விமானங்களின் முன்மாதிரிகளான J-36 மற்றும் J-50 ஆகியவற்றை சோதனை செய்து வருகிறது.
ஏ,எம்.சி.ஏ (AMCA) திட்டத்திற்கான ஒப்புதல், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இந்த திட்டத்தை வடிவமைத்து மேம்படுத்த ஒப்புதல் அளித்த ஒரு வருடம் கழித்து வந்துள்ளது. ஏ,எம்.சி.ஏ (AMCA) விமானம், 25 டன் எடை கொண்ட இரட்டை எஞ்சின் விமானமாகும். இது எதிரி ரேடார்களில் இருந்து தப்பிக்கக்கூடிய மேம்பட்ட 'ஸ்டெல்த்' தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். அதாவது, இந்த விமானம் மிகக் குறைந்த மின்காந்த அலைகளை வெளியிடுவதால், எதிரி ரேடார்களால் கண்டறிய முடியாது. அதே நேரத்தில், எதிரி விமானங்களைக் கண்டறிந்து தாக்கி அழிக்கும் மேம்பட்ட சென்சார்கள் மற்றும் ஆயுதங்களும் இதில் இருக்கிறது.
இந்த விமானம் பெரிய உள் எரிபொருள் தொட்டியைக் கொண்டிருக்கும், அதில் 6.5 டன் எரிபொருளை சேமிக்க முடியும். மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை உட்பட பல்வேறு ஆயுதங்களை வைப்பதற்கான உள் ஆயுதக் களஞ்சியமும் இதில் இருக்கும். தற்போது, இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ15,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.எம்.சி.ஏ எம்.கே.1 (AMCA Mk1) விமானம் தற்போதுள்ள 90kN திறன் கொண்ட GE 414 எஞ்சினில் பறக்கும். அதே நேரத்தில், ஏ.எம்.சி.ஏ எம்.கே.1 (AMCA Mk2) விமானம் DRDO-வின் கேஸ் டர்பைன் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு வெளிநாட்டு பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கும் 110kN திறன் கொண்ட சக்திவாய்ந்த எஞ்சினில் இயங்கும். முன்னதாக, ஏ.டி.ஏ (ADA) அதிகாரிகள் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த ஐந்து வருடங்களுக்குள் முதல் ஏ.எம்.சி.ஏ (AMCA) விமானத்தின் சோதனைப் பறப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந்த விமானத்தின் முழு மேம்பாட்டு காலமும் சுமார் 10 ஆண்டுகள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக ஐந்து முன்மாதிரி விமானங்களைத் தயாரித்த பின்னரே உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் உற்பத்தி, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைக் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணைக்கும். தற்போது அமெரிக்கா (F-22 ராப்டர் மற்றும் F-35A லைட்னிங் II), சீனா (J-20 மைட்டி டிராகன்) மற்றும் ரஷ்யா (சுகோய் Su-57) ஆகிய நாடுகளே இந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.