/indian-express-tamil/media/media_files/2025/08/17/cp-radha-krishnan-2025-08-17-20-38-11.jpg)
துணை குடியரசு தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
இந்தியாவின் துணை குடியரசு தலைவர், ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, என்.டி.ஏ கூட்டணியில், துணை குடியரசு தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கலுக்கு இன்னுமு் சில நாட்களே உள்ள நிலையில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு குறித்து, நிதிஷ் குமாரின் ஜே.டி.(யு) மற்றும் என்.சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு முறையாகத் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுனராக இருக்கிறார், அவருக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் உள்ளது. மேலும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை இந்த உயரிய பதவிக்குத் தேர்வு செய்திருப்பது, அடுத்த ஆண்டு வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களை மனதில் கொண்டு செய்யப்பட்ட ஒரு முடிவாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜ.க,இன்னும் வலுவான அடித்தளத்தை உருவாக்கத் திணறி வரும் நிலையில், இந்த நடவடிக்கை ஒரு புதிய வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்கனவே, ஜார்க்கண்ட் ஆளுநராகவும், புதுச்சேரிக்கு கூடுதல் பொறுப்பு ஆளுநராகவும் இருந்துள்ளார். கோயம்புத்தூரில் இருந்து இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும், தமிழக பாஜகவின் தலைவராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார். 16 வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு தன்னை இணைத்துக் கொண்டவர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நெருக்கமானவராகவும், பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டு பாணியை நன்கு அறிந்தவராகவும் சி.பி. ராதாகிருஷ்ணன் இருக்கிறார்.
இதுமட்டுமின்றி, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பதவி விலகிய ஜகதீப் தன்கருக்கு நேர் எதிரான ஒரு ஆளுமையாக சி.பி. ராதாகிருஷ்ணன் பார்க்கப்படுகிறார். சி.பி. ராதாகிருஷ்ணனின் இந்த நியமனம், டெல்லியின் அதிகார மையத்தில் தமிழகத்தின் குரல் ஒலிக்க ஒரு வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.