India news in tamil: இந்தியாவில் கொரோனா தொற்றின் 2அலை மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி வரும் நிலையில், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும் முதல் டோஸ் தடுப்பூசிகள் செலுத்துவதற்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளுக்கு இடையிலான இடைவெளியை 6 - 8 வாரங்களிலிருந்து 12-16 வாரங்களுக்கு நீட்டிப்பதாக நேற்று வியாழக்கிழமை மத்திய அரசு அறிவித்தது.
இதனையடுத்து கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் மற்றும் 2வது டோஸுக்கு இடையிலான கால அளவை நீட்டிக்க இந்திய அரசின் முடிவு “நியாயமான அணுகுமுறை” என்று அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபாசி தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த நேர்காணலில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அதிகமான மக்கள் தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெறுவதை உறுதிப்படுத்த உதவும் என்று கூறியுள்ளார்.
"நீங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது, அதுவும் இந்தியாவில் இருக்கும் விதத்தில், உங்களால் முடிந்தவரை விரைவாக தடுப்பூசி போடுவதற்கான வழிகளை நீங்கள் முயற்சித்து கண்டுபிடிக்க வேண்டும், எனவே இது ஒரு நியாயமான அணுகுமுறை என்று நான் நம்புகிறேன். நீண்ட கால தாமதம் தடுப்பூசி செயல்திறனில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதில் சாத்தியமில்லை.
இந்தியா தனது சொந்த தடுப்பூசி திறன்களை அதிகரிக்க மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டும். உங்கள் மக்களுக்கு சில வளங்களைப் பயன்படுத்துவது முக்கியம்.
இது சுமார் 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய நாடு. முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களில் சுமார் இரண்டு சதவிகிதத்தினர் மட்டுமே உள்ளனர் அல்லது சுமார் 10 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு டோஸ் பெற்று இருப்பார்கள். எனவே தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான உங்கள் சொந்த திறனுடன் சேர்த்து, மற்ற நாடுகளுடன், பிற நிறுவனங்களுடன்
ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் உங்களுக்குத் தெரிந்தபடி, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக இந்தியா உள்ளது" என்று டாக்டர் அந்தோணி கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)