Chandrayan-2 : நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் செயற்கைக்கோளான சந்திராயன் 2 ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்தியா சார்பில் முதன்முதலாக நிலவைப்பற்றி ஆராய அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் சந்திராயன் 1 ஆகும். கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் செலவில் 2008 ஆம் ஆண்டும் அந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. மிகக்குறைந்த செலவில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் என்ற பெருமையை சந்திராயன் 1 இந்தியாவிற்குப் பெற்று தந்தது.
இதையடுத்து நிலவில் இறங்கி ஆராய்ச்சிகள் செய்யும் சந்திராயன் 2 ராக்கெட் தயாரிப்புப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ரூ.800 கோடி மதிப்பில் சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நீண்ட காலமாக ஆராய்சி செய்து வந்தது.
இந்நிலையில், சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் தேதி மற்றும் முழு விபரத்தை இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் ‘சந்திரயான் - 2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகிய மூன்று தொகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்று தொகுதிகளுக்கான பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுவிட்டன. ஜூலை 9 முதல் 16 வரையிலான காலத்தில் சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்பட்டு செப்டம்பர் 6ஆம் தேதி நிலவைச் சென்றடையும்’ என தெரிவித்துள்ளது.
May 2019
ஜிஎஸ்எல்வி - மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான் 2 செப்டம்பர் 6-ம் தேதி நிலவில் தரையிரங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2 பூமியிலிருந்து ஏவப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும். அதன் பின்னர் லண்டர் மற்றும் ரோவர் தனியாக பிரிந்து, லண்டர் நிலவின் தென் துருவத்திலுள்ள தரைப்பகுதியில் இறங்கும். நிலவில் இறங்கிய பிறகு ரோவர் பல ஆய்வுகளை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.