இந்திய அரசு அதிகாரிகள் சென்றிருந்த வர்த்தகப் பயணத்தின் போது, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரியர், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கை சந்தித்தார். சமூக வலைதளமான X-ல் வெளியிட்ட பதிவில், பிலட்டரல் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை விரைவுபடுத்த அமெரிக்க வர்த்தக செயலாளருடன் பயனுள்ள கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக கோயல் கூறினார்.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இந்தியா அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை 3 தவணைகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, மேலும் ஜூலை மாதத்திற்குள் இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்ய எதிர்பார்க்கிறது. அப்போது அதிபர் டிரம்ப்பின் பரஸ்பர வரிகள் நடைமுறைக்கு வரும். தொழில்துறை பொருட்கள், சில விவசாயப் பொருட்களுக்கான சந்தை அணுகல் மற்றும் இந்தியாவால் விதிக்கப்படும் தரகட்டுப்பாட்டு தரங்கள் போன்ற வரிகள் அல்லாத தடைகளை தளர்த்துவது உள்ளிட்ட பகுதிகளை இடைக்கால ஒப்பந்தம் உள்ளடக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த, ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், பிளாஸ்டிக், ரசாயனங்கள், இறால், எண்ணெய் விதைகள், திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு இந்தியா வரிச் சலுகைகளை கோருகிறது. சில தொழில்துறை பொருட்கள், ஆட்டோமொபைல்கள் (மின்சார வாகனங்கள்), ஒயின்கள், கெமிக்கல்கள், பால் பொருட்கள் மற்றும் ஆப்பிள், மரக் கொட்டைகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட (GM) பயிர்கள் போன்ற விவசாயப் பொருட்களின் மீது குறைந்த வரிகளை அமெரிக்கா கோருகிறது.
முன்னதாக மே 15 அன்று, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம், உள்நாட்டு சந்தைக்காக உற்பத்தி செய்யப்படாவிட்டால், இந்தியாவில் உற்பத்தி நடவடிக்கைகளை விரிவாக்குவதைத்தான் விரும்பவில்லை என்று தெரிவித்ததாகக் கூறினார். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா "அனைத்து வரிகளையும் குறைக்க முன்வந்துள்ளது" என்றும் அவர் மேலும் கூறினார்.