/indian-express-tamil/media/media_files/2025/09/24/unhrc-2025-09-24-14-27-22.jpg)
கைபர் பக்துன்க்வாவில் பொதுமக்கள் மீதான வான்வழித் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை ஐ.நா.வில் இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. Photograph: (PTI Photo)
செப்டம்பர் 23-ம் தேதி, ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் (யு.என்.எச்.ஆர்.சி) நடைபெற்ற அமர்வில் பேசிய இந்திய பிரதிநிதி க்ஷிதிஜ் தியாகி, “இந்த மன்றத்தை இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுவதற்கு பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்துகிறது” என்று குற்றம் சாட்டினார்.
“எங்கள் நிலப்பரப்பை ஆக்கிரமிக்க ஆசைப்படுவதற்குப் பதிலாக, சட்டவிரோதமாக அவர்கள் ஆக்கிரமித்துள்ள இந்திய நிலத்தை காலி செய்துவிட்டு, தங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும், ராணுவத்தால் நசுக்கப்படும் அரசியலமைப்பிலும், மனித உரிமை மீறல்களாலும் பாதிக்கப்பட்ட தங்கள் சொந்த மக்களின் துன்பங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதையும், ஐ.நா-வால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளை ஆதரிப்பதையும், சொந்த மக்கள் மீது குண்டு வீசுவதையும் கைவிட்டுவிட்டு, இந்த வேலைகளைச் செய்வது நல்லது” என்று தியாகி கடுமையாகப் பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த கவுன்சில் அதன் அணுகுமுறையில் நடுநிலையாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும். ஒரு சில நாடுகளில் மட்டும் மனித உரிமை நிலைமைகளை கவனத்தில் கொள்வது, உலக அளவில் இருக்கும் மற்ற அவசரமான சவால்களில் இருந்து நம் கவனத்தை திசை திருப்புகிறது. பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலமாக மட்டுமே நீண்டகால முன்னேற்றம் சாத்தியமாகும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பாகிஸ்தான் தலிபான் குழுவிற்கு சொந்தமான ஒரு இடத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பில், 10 பொதுமக்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் மாகாண பிரிவு மற்றும் அப்பகுதி மக்கள் இது ‘விமான குண்டுவீச்சு’ என்று கூறினர். ஆனால், உள்ளூர் நிர்வாகம் இதனை மறுத்து, வெடிகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.