India the only country which is not reaping the benefits of the lockdown strategy : கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன் பின்னால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக பலரும் பல்வேறு வகையில் பாதிப்பு அடைந்து வருகின்றனர். அதன் ஒட்டுமொத்த விளைவையும் இந்தியா அனுபவித்து வருகிறது. வேலை இழப்பு, வேலையில்லா திண்டாட்டம், வறுமை, உள்நாட்டு உற்பத்தி பாதிப்பு என்று அனைத்து வகையிலும் சிக்கல்களை எதிர்நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் டிவிட்டர் பக்கத்தில் இந்நிலை குறித்து கருத்துகளை பதிவு செய்துள்ளார். அதில் 21 நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்போம் என்று கூறினார் மோடி. ஆனால் ஊரடங்கால் மற்ற நாடுகள் வெற்றி அடைந்த போது, நாம் ஏன் தோல்வியை சந்தித்தோம் என்று விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஊரடங்கால் எந்த ஒரு பலனையுமே அடையாத நாடு இந்தியா தான் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில் செப்டம்பர் மாத இறுதிக்குள் சுமார் 55 லட்சம் நபர்கள் கொரோனா நோய்தொற்றுக்கு இந்தியாவில் ஆளாவார்கள் என்று கணித்திருந்தேன். ஆனால் செப்டம்பர் 20ம் தேதிக்குள்ளே நாம் அந்நிலையை அடைந்துவிடுவோம். செப்டம்பர் மாத முடிவில் 65 லட்சம் நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகும் என்று கூறியிருந்தார்.
மேலும் இந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏன் இறங்குமுகமாக சென்றது என்பதை, ஏன் மத்திய நிதித்துறை அமைச்சர் விளக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil