/tamil-ie/media/media_files/uploads/2020/08/New-Project-2020-08-22T224303.460.jpg)
கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பகுதிகளில் முடக்கநிலை நீக்கத்துக்கான புதிய வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. ஐந்தாவது கட்ட முடக்கநிலை நீக்க தளர்வுகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
திரையரங்குகள், மல்டிபிளெஸ்க்கள் ஆகியவை 50 சதவீத இருக்கைகளை நிரப்பும் வகையில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15 முதல் நீச்சல் குளங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்தது.
அக்டோபர் 15ம் தேதிக்குப் பிறகு, பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஆன்லைன்/ தொலைநிலை கற்றல் முறைகளைத் தொடர அனுமதிக்கலாம், ஊக்குவிக்கலாம்.
சில மாணவர்கள் உடல் ரீதியாக பள்ளிக்கு வருவதை தவிர்த்து, ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வியைத் தொடர விரும்பினால், அதை பள்ளிகள் அனுமதிக்கலாம். பெற்றோர்/ காப்பாளர் எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளிப்பதன் அடிப்படையில் மட்டுமே பள்ளிக்கூடங்களுக்கு வர அனுமதிக்கலாம். வருகைப்பதிவேடு அமல்படுத்தப்படக்கூடாது. என்று வழிமுறைகள் தெரிவிக்கின்றன.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்ட வழிமுறைகளில்,“சினிமா தியேட்டர்கள் / மல்டிபிளெக்ஸ் 50 சதவீத இருக்கைகளை நிரப்பும் வகையில் செயல்பட அனுமதிக்கப்படும். இதற்காக, நிலையான இயக்க நெறிமுறை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், அக்டோபர் 15ம் தேதிக்குப் பிறகு சமூக/ கல்வி / விளையாட்டு / பொழுதுபோக்கு/ கலாச்சார / மத / அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் இதர கூடுதல் நிகழ்ச்சிகளில் 100 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.