சிங்கப்பூர் காவல் துறையில் மின் தொழில்நுட்ப பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் கேபிள் வயர் திருட முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் 3 பேருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு சிங்கப்பூர் காவல் துறையில் தங்கள் ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 ஊழியர்கள் மின் தொழில்நுட்ப பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மின்சார வயர்களை திருடியதாக இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் மற்ற 3 பேருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஊழியர்கள் எழிலரசன் நாகராஜன் (26), ராதாகிருஷ்ணன் இளவரசன்(28) ஆகியோருக்கு 1,000 சிங்கப்பூர் டாலர் அபராதமும். 29 வயதான பாலசுப்ரமணியன் நிவாஸுக்கு 1,500 சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முருகன் கொத்தாலம் (27) என்பவர் கேபிள் வயர்களை கையாளும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
சிங்கப்பூர் அரசு துணை வழக்கறிஞர் வி. ஜேசுதேவன் நீதிமன்றத்தில் கூறுகையில், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 15- ம் தேதி காலை 10.30 மணியளவில் ஆல்டெக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் இளவரசன், நிவாஸ் ஆகியோர் காவல்துறை தேசிய சேவைத் துறை கட்டடத்திற்கு பணிபுரிய வந்துள்ளனர்.
அப்போது தங்கள் மேற்பார்வையாளர் அறிவுறுத்தலில் பேரில் இருவரும் ஹோஸ் ரீல் பெட்டியில் இருந்து வயர்களை எடுத்துள்ளனர். அப்போது நிவாஸ், இளவரசன் ஆகியோர் கேபிள்களை அறுத்து விற்பனை செய்ய திட்டமிட்டனர்.
நாகராஜனும் இளவரசனும் கேபிள்களை மூட்டையாக கட்டிக்கொண்டு வேறு ஒரு கட்டடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக வெளியில் வந்த நிவாஸ், கொத்தாலம் ஏணில் நின்றபடி மின்சாரம் தாக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து நிவாஸ் ஏணியை உதைத்து கீழே தள்ளினார். இந்நிலையில் மின்சார வயர் திருட்டு வழக்கில் மற்ற 3 பேரும் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து, நேற்று (திங்கள்கிழமை) நீதிமன்றம் 3 பேருக்கும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/