இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழக மீனவர் குழுவினர், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை நேற்று (மார்ச் 13, 2025) சந்தித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 13 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பிப்ரவரி 9, 2025 அன்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கைது செய்து இரண்டு படகுகளைக் கைப்பற்றியது. இந்த தாக்குதல் குறித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள், வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று (மார்ச் 13) தமிழக மீனவர்கள் குழுவை சந்தித்து பேசியுள்ளார். மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அண்ணாமலை தலைமையிலான தமிழக மீனவர் குழுவை இன்று மாலை டெல்லியில் சந்தித்தோம். நிலையான தீர்வை ஆராயும் நோக்கில் அவர்களின் கவலைகள் குறித்து விவாதித்தோம். அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு வழிகாட்டும். தூதரக வழக்குகளில் எங்கள் உயர் ஸ்தானிகராலயம் தொடர்ந்து முழு ஆதரவை வழங்கும்," என்று பதிவிட்டுள்ளார்.
ஜனவரி 28 அன்று, டெல்ஃப்ட் தீவு அருகே இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த்து. கப்பலில் இருந்த 13 மீனவர்களில் இருவர் பலத்த காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் காயமடைந்த மீனவர்களை மருத்துவமனையில் சந்தித்தித்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலில், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் "சாத்தியமான அனைத்து உதவிகளையும்" வழங்குவதாக இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உறுதியளித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, புதுதில்லியில் உள்ள இலங்கையின் பொறுப்பு உயர் ஸ்தானிகர் தெற்குத் தொகுதிக்கு வரவழைக்கப்பட்டார், மேலும் இந்த சம்பவம் தொடர்பாக "வலுவான எதிர்ப்பு" தெரிவிக்கப்பட்டது.
மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமான முறையில், வாழ்வாதாரக் கவலைகளை மனதில் கொண்டு நடத்த வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது. எந்த சூழ்நிலையிலும் பலத்தைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது," "இது தொடர்பாக இரு அரசாங்கங்களுக்கிடையில் இருக்கும் புரிதல்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்" என்று வெளியுறவு அமைச்சகம் ஜனவரி 28 அன்று கூறியது குறிப்பிடத்தக்கது.