ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் 23 வயதான இந்திய இளைஞர் ஒருவர் இனவெறித் தாக்குதலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் நடந்த இச்சம்பவம், வாகன நிறுத்தம் தொடர்பான தகராறு, இனவெறிப்பேச்சால் தூண்டப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை இரவு கின்டோர் அவென்யூவில் நடந்த இச்சம்பவத்தில், சரண்ப்ரீத் சிங் என்ற இந்திய இளைஞர் தனது வாகனத்தை நிறுத்தி உள்ளார். அப்போது ஒரு கும்பல் அவரை அணுகி இனவெறி வார்த்தைகளைப் பேசியதோடு, அவரைத் தாக்கி மயக்கமடையச் செய்ததாகக் கூறப்படுகிறது. "அவர்கள் என்னை நோக்கி ஆபாசமாக கத்தினார்கள், அதன்பிறகு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்" என்று சிங் ஆஸ்திரேலியாவின் 9NEWS செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் அவருக்கு மூளைக் காயம் மற்றும் முகத்தில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு, மருத்துவமனையில் ஒரு இரவு சிகிச்சை பெற்றார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்தச் சம்பவம் தொடர்பாக என்பீல்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, தாக்குதல் மற்றும் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு முன்பே தப்பிச்சென்ற மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக 9NEWS தெரிவித்துள்ளது.
"இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது, நாம் இங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. நீங்கள் உங்கள் உடலில் எதை வேண்டுமானாலும் மாற்றலாம், ஆனால் நிறத்தை மாற்ற முடியாது," என்று சிங் வேதனையுடன் கூறியுள்ளார். தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் பீட்டர் மலினௌஸ்காஸ் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். "எந்தவொரு இனவெறித் தாக்குதலும் எங்கள் மாநிலத்தில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது எங்கள் சமூகத்தின் பெரும்பான்மையினரின் மனநிலைக்கு முரணானது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.