இந்தியா மீது கடல்மார்க்கமாக நீருக்கடியில் இருந்து தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷே முகமது தீவிரவாத இயக்கத்தினர் பயிற்சி பெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து கப்பற்படை அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த கப்பற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கூறியதாவது, இந்தியா மீது கடல்மார்க்கமாக நீருக்கடியில் இருந்து தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷே முகமது தீவிரவாத இயக்கத்தினர் பயிற்சி பெறுவதாக உளவுத்துறையினர் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இந்தியா அதிதீவிர கண்காணிப்பு மட்டுமல்லாது படைகள் அனைத்தும் தயார்நிலையில் இருப்பதால், எவ்வித தாக்குதலையும் அவர்கள் நடத்த வாய்ப்பில்லை என்று கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது 2008ம் ஆண்டில் நடைபெற்ற மும்பை தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளை கப்பற்படை தன்வசம் எடுத்துக்கொண்டுள்ளது. இந்திய கப்பற்படை தற்போது கடலோர காவல்படை மற்றும் மேரிடைம் போலீஸ் உடன் இணைந்து அசுர பலத்துடன் உள்ளது. கடல்மார்க்கமாக எவ்வித ஊடுருவலும் நடைபெறாதவகையில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
விமானப்படை தளபதி ஏர்சீப் மார்சல் பி எஸ் தனோவாவும், எல்லைப்பகுதியில் அதிதீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், எந்த நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயார் - இம்ரான் கான்
இந்திய ராணுவத்தினரின் அடக்குமுறைகளில் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்ற எந்தவிதமான நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய 3ம் நபர் தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம், இந்திய பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், இம்ரான் கானின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பாகிஸ்தானில் டிவி மூலம் நாட்டுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது, காஷ்மீரில் தவித்துக்கொண்டிருக்கும் 80 லட்சம் காஷ்மீரி மக்களுக்காக தான் எப்போதும் துணைநிற்பேன். காஷ்மீரின் சுயாட்சியை நீக்கியுள்ளதன் மூலம், இந்திய பிரதமர் மோடி வரலாற்று பிழையை நிகழ்த்திவிட்டார். இந்திய அரசு, காஷ்மீர் பகுதியில் அதிகளவில் படைகளை குவித்துவருகிறது. நேரு, காஷ்மீர் மக்களுக்கு செய்துகொடுத்த வாக்குறுதிகளை மீறி மோடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியா, ஐ.நா.விதிகளுக்கு எதிராக செயல்படுகிறது. இந்த விவகாரத்தில், யார் நமக்கு துணை நிற்கிறார்களோ இல்லையோ, காஷ்மீரில் தவித்து வரும் 80 லட்சம் காஷ்மீரி மக்களுக்காக பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.