இந்தியாவில் படிப்போம் உள்ளிட்ட திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதன் மூலம், , பள்ளி மற்றும் உயர்கல்வித்துறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது புலனாகியுள்ளது.
2019 -2020ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, புதிய கல்விக்கொள்கை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. உலகத்தரத்திலான உயர்கல்வியை, மாணவர்கள் இந்தியாவிலேயே பெறும் அடிப்படையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்தியாவில் படிப்போம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம், இந்திய மாணவர்கள், உயர்படிப்புகளுக்காக வெளிநாடு செல்லும் நிலை மாறி, வெளிநாட்டு மாணவர்கள், அதிகளவில் இந்தியாவில் வந்து படிக்கும் நிலை ஏற்படுத்தப்படும். இதன்மூலம், இந்திய ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமைப்பு ஏற்படுத்த புளுபிரின்ட், இந்த பட்ஜெட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்புத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான அம்சங்கள் அதிகளவில் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இந்திய இளைஞர்கள் ஆராய்ச்சி துறையில் சிறந்து விளங்கும் பொருட்டு, தேசிய ஆராய்ச்சி கழகம் ஏற்படுத்தப்படும். இதன்மூலம், ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் அதிகளவில் ஊக்குவிக்கப்பட்டு, நம் நா்டடிலேயே அதிகளவிலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளத்தக்க சூழ்நிலை அவர்களுக்கு உருவாக்கி தரப்படும். ஆராய்ச்சிகளுக்கு தேவையான நிதி ஒதுக்குவதில் உள்ள இடர்பாடுகள் விரைவில் களையப்பட்டு, ஆராய்ச்சிகள் அதிகளவில் நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எதிர்காலத்தில் இன்றியமையாத துறைகளாக விளங்க உள்ள செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளை, பள்ளி அளவிலேயே மாணவர்களுக்கு கற்றுத்தருதல், மாணவர்களை, ஆராய்ச்சிகளுக்கு பள்ளிப்பருவத்தில் இருந்தே தயார்படுத்துதல் என்ற வகையில் கல்விக்கொள்கைககள் மாற்றியமைக்கப்படும்.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், கல்வித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படாத நிலையில், மோடி பிரதமராக இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் பட்ஜெட்டில், கல்வித்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.