டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி, இண்டிகோ விமான பயணி ஒருவரை, அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இருவர் தாக்கியிருக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ராஜீவ் கட்டியால் என்ற பயணி தான் தாக்கப்பட்டிருக்கிறார். இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக, விமான நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் ஏற முற்பட்ட போது, ராஜீவுக்கும் விமான நிலைய ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இரண்டு ஊழியர்கள் அவரைத் தாக்குவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. உடனிருந்த மற்றொரு ஊழியர் இந்த சண்டையை தனது போனில் படம் பிடித்து, சமூக தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
ஆனால், விமான நிறுவனமோ, பயணியை தாக்கிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், படம் பிடித்த அந்த ஊழியரை பணி இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது. சம்பவம் நடந்து 22 நாள்கள் கடந்தபின்னர், அந்த வீடியோ தற்போது வெளியான உடன், இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. இதுதொடர்பாக அந்த ஊழியர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, பயணியைத் தாக்கிய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இண்டிகோ விமான நிறுவன நிர்வாகத்திடம் பேசியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், விசாரணை நடத்தி குறிப்பிட்ட ஊழியர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.