முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 101 ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்திரா காந்தி பிறந்த தினம் :
இந்திய அரசியலை இந்திரா காந்திக்கு முன், பின் என இரண்டாக பிரிக்கலாம். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஒரே மகளான இந்திராகாந்தி, இந்தியாவின் இரும்பு பெண்மணி என போற்றப்படுகிறார். லால் பகதூர் சாஸ்திரி கடந்த 1966-ஆம் ஆண்டு மரணமடைந்த பின்னர் இந்திரா நாட்டின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார்.
பதவியேற்புக்கு பின்னர், இவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் வரலாற்றில் மறையாதது. பாகிஸ்தான் போரில் வென்றது, வங்கதேச பிரிவினைக்கு உதவியது, அணு ஆயுத திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியது, பசுமை புரட்சி, என்று பல கூறிகொண்டே போகலாம்.
1917-ஆம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பிறந்த இந்திரா காந்தி, கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதியன்று, அவரது பாதுகாவலர்களாக இருந்த இரண்டு சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் மறைவுக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் பல. இந்நிலையில், இந்திரா காந்தியின் 101 ஆவது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, டெல்லியில் உள்ள சக்தி ஸதலத்தில் இந்திராகாந்தியின் நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நமது முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்த தினமான இன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.