இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி ஒரு நிகழ்ச்சியில் தொழிலதிபர் ரத்தன் டாட்டா காலைத்தொட்டு வணங்கிய புகைப்படம் டுவிட்டரில் வைரல் ஆகியுள்ளது. மூத்தவர்களின் காலைத்தொட்டு வணங்கும் இந்திய மரபைக் குறிப்பிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.
மும்பையில் ஆண்டுதோறும் நடைபெறும் டைகான் நிகழ்ச்சியில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா ஆகிய இரு முக்கிய தொழிலதிபர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், நாராயணமூர்த்தி, ரத்தன் டாடாவுக்கு விருது வழங்கிய பின்னர், குனிந்து அவருடைய கால்கலைத் தொட்டு வணங்கி மரியாதை செய்தார்.
இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோவை ரத்தன் டாட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய மிகப்பெரிய நண்பர் நாராயணமூர்த்தியின் கைகளால் டைகான் விருது வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவில், 73 வயதான நாராயண மூர்த்தி 82 வயதான ரத்தன் டாட்டாவுக்கு விருது வழங்கிய பின்னர், குனிந்து அவருடைய கால்களைத் தொட்டு வணங்கி மரியாதை செய்கிறார்.
மேலும், இந்த நிகழ்வின் மனதைத் தொடும்படியான புகைப்படங்களை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் டுவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.
இன்போசிஸ் இணை நிறுவனர், நாராயணமூர்த்தி, மும்பையில் டைகான் விருது வழங்கும் நிகழ்வில், ரத்தன் டாட்டாவிடம் இருந்து ஆசீர்வாதம் பெறுகிறார். மனதின் ஆழத்தைத்தொடும் ஒரு வரலாற்று தருணம்” என்று டைகான் மும்பை நிறுவனம் குறிப்பிட்டுள்ளனர்.
டைகான் மும்பையின் 11 வது ஆண்டு நிகழ்வில், ரத்தன் டாடாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
ரத்தன் டாட்டாவின் நீடித்த மரபு என்பது நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டின் மிக உயர்ந்த தரம். இது தொழில்முனைவோர்களுக்கு அவர்களின் பயணத்தில் பல தசாப்தங்களுக்கு வழிகாட்டும்.
ஹால் ஆஃப் ஃபேம் விருது பெற்றவர்கள் முன்மாதிரியான தைரியத்தைக் காட்டியுள்ளனர். ஆயிரக்கணக்கானோருக்கு வளத்தையும் வாய்ப்புகளையும் உருவாக்கி போட்டியாளராக இருப்பதில் ஆர்வம் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட ஆல் ஆஃப் ஃபேம் விருதாளர்” என்று டை மும்பையின் தலைவர் அதுல் நிஷார் தெரிவித்துள்ளார்.