மருத்துவமனைச் செலவுகளைச் சமாளிக்க உதவும் காப்பீட்டுப் பலன்களை மறுப்பது குறித்த தில்லி உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன்படி, மரபணு கோளாறுகள் தொடர்பாக ஏற்படும் நோய்களுக்கு, சிகிச்சைப் பெற்றால், அதற்கான மருத்துவச் செலவை ஏற்க காப்பீட்டு நிறுவனம் மறுக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஐஆர்டிஏ என சுருக்கமாக குறிப்பிடப்படும், இத்துறைக்கான வழிகாட்டு ஆணையத்துக்கு பரிந்துரை ஒன்றையும் தில்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அதாவது, மரபணு கோளாறுகள் காரணமாக, சிலருக்கு ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை பெற அனுமதிக்க இயலாது என்ற வகையிலான சில விதிகளை காப்பீட்டு பாலிசியின் முன்நிபந்தனைகளாக இத்துறை நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு செய்வது ஏற்புடையதல்ல.
எனவே, காப்பீட்டு நிறுவனங்களின் மருத்துவ காப்பீட்டுப் பாலிசி விதிகளை மறு ஆய்வு செய்து தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனவும், மரபணு கோளாறு காரணமாக ஏற்படும் நோய் பாதிப்புக்கு சிகிச்சை செலவு மறுக்கப்படும் நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.
ஜெய் பிரகாஷ் தயாள் என்பவருக்கு இவ்விதமான மருத்துவமனைச் செலவுகள் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தால் மறுக்கப்பட்டபோது, அவர் நீதிமன்றம் சென்றார். தில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த இதன் மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக, பிறவியில் இருந்தே உள்ள, வெளிப்படையாக தெரியும் மரபணு கோளாறுகளுக்கு... பாலிசி எடுக்கும்போது நுகர்வோருக்கு தெரிந்த மரபணு கோளாறுகளுக்கு காப்பீட்டு பலன் தரப்படாது என சில விதிகளை சில காப்பீட்டு நிறுவனங்கள் கூறி வந்தன. ஆனால், மரபணு கோளாறுகள் பொதுவாக எந்த நுகர்வோருக்கும் முன்னதாகவே தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அதனால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவற்றிக்கான மருத்துவ செலவுகளை மறுக்கப்படக் கூடாது என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.