நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி, வரும் 30ம் தேதி, இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
17வது லோக்சபா தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம், கடந்த 30 ஆண்டுகளில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற சாதனையை, பாரதிய ஜனதா படைத்துள்ளது. இதனையடுத்து மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார்.
வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் மற்றும் பூடான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) அமைப்பை ஏற்படுத்தியுள்ளன.
பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில், BIMSTEC நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதுமட்டுமல்லாது, ஷாங்காய் கோபரேஷன் ஆர்கனேசேஷன் தலைமை பொறுப்பில் உள்ள கிர்கிஜ் குடியரசு தலைவர்கள், மொரிசியஸ் நாட்டு தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நேரத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், அவருக்கு பதிலாக, அந்நாட்டின் மூத்த அமைச்சர் முஜம்மல் ஹக் கலந்துகொள்கிறார்.
கடந்த முறை பதவி ஏற்கும் போது சார்க் மாநாட்டில் இடம் பெறும் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தானை புறம் தள்ளுவதற்காக இம்முறை அவ்வாறாக அழைப்புகள் ஏதும் தரப்படவில்லை.
ஜப்பான் நாட்டு பிரதமர் சிஞ்ஞோ அபே தான் முதல்முறையாக மோடிக்கு வாழ்த்துகள் கூறினார். சிஞ்ஞோ அபேவை இம்முறை விழாவிற்கு அழைப்பார்களா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது.
இஸ்ரேலுடன் இன்னும் நல்ல இணக்கத்தில் இருக்கும் மோடி, தன்னுடைய நண்பர் மற்றும் இஸ்ரேலின் பிரதமருமான பெஞ்சமின் நெதன்யஹுவை இந்த விழாவிற்கு அழைப்பாரா என்றும் இது வரை தெரியவில்லை. ஆனால் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளில் இருந்து அனைதது தலைவர்களும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
குறிப்பாக கிர்கிஸ் குடியரசின் அதிபர் சூரேன்போய் ஜீன்பெகோவ், மொரிசியஸ் தீவுகளின் பிரதமர் ப்ரவிந்த் ஜக்நாத் ஆகியோர்களுக்கு பிரத்தேக அழைப்புகள் சென்றடைந்துள்ளன.