ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட், கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். பின்னர் அவரை தங்கள் தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சி.பி.ஐ. தன்னை இழிவுப்படுத்த விரும்புகிறது என கூறி உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் சார்பில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இதற்காக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிசேக் சிங்வி ஆகியோர் ப. சிதம்பரம் சார்பில் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கின் விசாரணை நாளை எடுத்து கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, அமலாக்கத் துறையினர் ப.சிதம்பரத்தினை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. திகார் சிறைக்கு அமலாக்கத் துறையினர் நேரில் சென்று 30 நிமிடங்கள் விசாரணை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, நாளை காலை 8.30 மணியளவில் திகார் சிறையில் சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.