ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்குள் செல்வதற்கு முன், தனது மதத்தைத் தெரிவிக்கும் படிவத்தை நிரப்புமாறு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதையடுத்து, அவர் திருமலைக்கான பயணத்தை ரத்து செய்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Jagan cancels Tirupati visits but tears into Naidu: ‘Don’t people know my religion? Why is my faith under question now?’
ஜெகன் வெள்ளிக்கிழமை மாலை திருமலைக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை கோயிலுக்குச் செல்ல வேண்டும். அவரது முன்மொழியப்பட்ட வருகை, தெலுங்கு தேசம் கட்சி, ஜன சேனா கட்சி மற்றும் பா.ஜ.க ஆகியவற்றால் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது, அவர்கள் அவரது திட்டத்தை சீர்குலைக்க போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யை கலப்படம் செய்ததாக ஒய்.எஸ்.ஆர்.சி.பி மீது குற்றம் சாட்டியதிலிருந்து ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது கட்சியினர் சர்ச்சைக்குள்ளாகி உள்ளனர்.
ஊடகங்களிடம் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சோதனையில் தோல்வியுற்ற அனைத்து டேங்கர் நெய்களையும் திருப்பி அனுப்பியதாக பல அறிக்கைகளைப் படித்து தெளிவுபடுத்த பல அறிக்கைகளைப் படித்தார்.
முதல்வர் நாயுடுவையும், தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் மதத்தை பயன்படுத்தி அரசியல் பழிவாங்குவதாக அவர் சாடினார்.
“நான் என் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பைபிளைப் படிக்கலாம், ஆனால், வெளியே நான் இந்து, இஸ்லாம் மற்றும் சீக்கிய மதங்களை மதிக்கிறேன். மக்களுக்கு என் மதம் தெரியாதா? முதல்வராக இருந்த நான், வெங்கடேசப் பெருமாலுக்கு புனித வஸ்திரங்களை சமர்ப்பித்துள்ளேன். என் மதம் மற்றும் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கவில்லை. என்னை கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று தெலுங்கு தேசம் கட்சி மற்றும் கூட்டணி தலைவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது?” என்று ஜெகன் மோகன் கூறினார்.
தெலுங்கு தேசம் கட்சி, ஜே.எஸ்.பி, பா.ஜ.க தலைவர்கள் வார்த்தைகளை திரித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று கூறிய அவர், “மதச்சார்பற்ற என்ற வார்த்தையின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? மதத்தின் பெயரால் கேவலமான அரசியலில் ஈடுபடாதீர்கள். ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்கள் அனைவரும் கோயில்களுக்குச் சென்று, வெங்கடேஸ்வரா கோவிலின் புனிதத்தையும், திருப்பதி லட்டுகளையும் அவமதித்ததாக குற்றச்சாட்டுகளை பரப்பி தவறு செய்தவர் சந்திரபாபு நாயுடு என்று மக்களிடம் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறினார்.
ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவை குறி வைத்து கூறுகையில், “இது என்ன இந்துத்துவா? மனிதநேயம் என்பது இந்து மதம். நல்ல செயல்கள் செய்வது இந்து மதம். என் பார்வையில், எந்த ஒரு இந்துவும் கெட்ட காரியங்களைச் செய்கிறாரோ அவர் உண்மையான இந்து அல்ல.” என்று கூறினார்.
தனது பாதயாத்திரைக்குப் பிறகு, இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக கோயிலுக்குச் சென்றதாக ஜெகன் கூறினார். “நான் கோவிலுக்கு பலமுறை சென்றது மட்டுமல்ல, பிரதமருடன் சென்றேன், பல தலைவர்களுடன் சென்றேன், அப்போது ஏன் என்னை விசாரிக்கவில்லை? இப்போது என் நம்பிக்கை ஏன் கேள்விக்குறியாகிவிட்டது? இது என்ன வகையான மதச்சார்பின்மை?” என்று கேள்வி எழுப்பினார்.
“ஐந்தாண்டுகள் முதல்வராக இருந்த நான் வெங்கடேசப் பெருமாளுக்குப் புனித வஸ்திரங்களைச் சமர்ப்பித்த என்னை, கோவிலுக்குச் செல்லவேண்டாம் என்று கூறுகிறீர்களா? ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருந்த எனது தந்தை, இறைவனுக்கு புனித வஸ்திரங்களை சமர்பித்தார். என் மதத்தையும் நம்பிக்கையையும் கேள்வி கேட்க நீங்கள் யார்? நீங்கள் ஒரு அறிவிப்பு படிவத்தை நிரப்ப விரும்பினால், அதை நிரப்பவும். என் நம்பிக்கையும் மதமும் மக்களுக்குத் தெரியாதா?” என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“