பஞ்சாப் ஜலந்தரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கொச்சியில் செயல்பட்டு வருகிறது மிஷனரீஸ் ஆஃப் ஜீஸஸ் எனும் திருச்சபை. அந்த திருச்சபையின் ஆயர் பிரான்கோ முல்லக்கல் மீது கோட்டயம் மாவட்டம் குருவிலங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் கன்னியாஸ்திரி மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றினை கூறியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது முறையாக திருச்சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாஸ்திரி குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
ஆனால் அவருடைய புகார் ஏற்றுக் கொள்ளப்படாததைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தின் உதவியை நாடினார். பின்னர் கொச்சி பகுதியில் பணி புரிந்து வந்த ஐந்து கன்னியாஸ்திரிகள் மற்றும் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் ஒன்று கூடி ஆயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குற்றம் சாட்டிய கன்னியாஸ்திரியின் புகைப்படத்தினை ஊடகங்களுக்கு கொடுத்து அவரின் மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது அந்த திருச்சபை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கன்னியாஸ்திரியின் சகோதரர் நேற்று கோட்டயம் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
மேலும் படிக்க : கன்னியாஸ்திரியின் புகைப்படம் வெளியானதால் ஏற்பட்ட சர்ச்சை
பிரான்கோ முல்லக்கல் பதவி விலகல்
இந்நிலையில் ஆயர் பிரான்கோ முல்லக்கல் தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். மேலும் தன்னுடைய பதவியை மாதிவ் கொக்கண்டம் மேற்கொள்வார் என்றும், இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்ட எனக்காகவும், கன்னியாஸ்திரி மற்றும் அவருக்காக போராட்டம் செய்கிறவர்கள் என அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். உண்மை மிக விரைவில் வெளியாகும் என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.