ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில் 370-வது பிரிவில் திருத்தம் மேற்கொண்டது. இதனால், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள தலைமை செயலகக் கட்டிடத்தில் பறந்து கொண்டிருந்த மாநில கொடியை அதிகாரிகள் அகற்றினர். இதனையடுத்து, தற்போது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு விட்டதால் தலைமைச் செயலகத்தில் மூவர்ண தேசிய கொடி பறக்கவிடப்பட்டது.
370 சட்டப்பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் படி, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரேதசங்களிலும் மூவர்ண கொடி மட்டுமே இனி பயன்படுத்த முடியும்.
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, ஜம்மு & காஷ்மீர் சட்டசபை சபாநாயகர் நிர்மல் சிங் தனது அரசு வாகனத்தில் இருந்து மாநில கொடியை அகற்றிய போது, ஜம்மு காஷ்மீரின் முதல் அரசியலமைப்பு பிரதிநிதியாக மாநில கொடியை அகற்றியவர் எனும் பெயரைப் பெற்றார் .
1952ம் ஆண்டில், ஷேக் அப்துல்லா மற்றும் பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்னிலையில், ஜம்மு & காஷ்மீர் மற்றும் இந்திய பிரதேசத்துக்கும் இடையே டெல்லியில் கையெழுத்தான ஒப்பந்தத்தில், தேசிய கொடியுடன் மாநில கொடியையும் ஜம்மு காஷ்மீரில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.