ஞான் தேவ் அஹூஜா ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ராம்கர் பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பாஜகவில் இருந்து கொண்டு பல சர்ச்சையான கருத்துகளை வெளியிடுவதில் பெயர் பெற்றவர்.
சமீபத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் பற்றி சர்ச்சை மிகுந்த கருத்தினை பத்திரைக்கையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
அதில் “பண்டிட் ஜவஹர்லால் நேரு என்று நேருவை அழைப்பது தவறு. மாட்டிறைச்சி மற்றும் பன்றியின் இறைச்சியை உண்பவர்களை எப்படி பண்டிட் என்று அழைக்க இயலும்” என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும் மாட்டுக்கறியை நாம் உண்ண மாட்டோம்.
குரான் படி பன்றி இறைச்சி உண்பது பாவம். ஆக அவரை பண்டிட் என்று அழைப்பது தவறு என்று கூறியுள்ளார். காஷ்மீர் பகுதியில் பண்டிட் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் என இரு சமுதாயத்தினரும் வாழ்ந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ஞான் தேவ் அஜூஜா
இவருக்கு சர்ச்சையாக பேசுவது ஒன்றும் புதிதல்ல. பழகிப் போன ஒன்றுதான். ஏற்கனவே 2016ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு நாளைக்கு மாணவர்கள் இத்தனை ஆணுறைகளை பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு பட்டியலையே வெளியிட்டவர் ஞான் தேவ் அஹூஜா.
மேலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தேசத்துரோக ஸ்லோகன்களை மாணவர்கள் கோஷமிடுகிறார்கள் என்றும் பேசியவர்.
பசு பாதுகாவல் தொடர்பாக சர்ச்சையாக பேசிய ஞான் தேவ் அஹூஜா
சமீபத்தில் ரக்பர் என்பவரை மாடு திருடவந்தவர் என்று நினைத்து பொது மக்கள் அவரை அடித்தே கொன்றுவிட்டனர். இது குறித்து கருத்து கூறிய அஹூஜா “மாடு திருட வந்தவர்களை நான்கு அறை அறைந்து மரத்தில் கட்டிவைத்துவிட்டு பின்பு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று பேசினார்.
பெஹ்லு கான் என்பவரை 2017ம் பசு பாதுகாவலர்கள் அடித்துக் கொன்றுவிட்டது தொடர்பாக கேட்ட போது “நாம் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு மற்றவர்களை தாக்கக் கூடாது. ஆனால் பெஹ்லு கானின் மறைவிற்காக வருத்தப்பட வேண்டாம். பசுக்களை கடத்துபவர்கள் பாவம் செய்தவர்கள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் குறிப்பிட்டவர் அவர்.
12ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ஞான் தேவ் அஹூஜா தன்னை ஒரு ஊடவியலாளராக அரசியல் வட்டாரங்களில் அறிமுகம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க