/indian-express-tamil/media/media_files/2025/03/07/SjZz7OwDEsqcJT5BON3u.jpg)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சமீபத்திய கருத்துக்களுக்கு, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா எதிர்வினையாற்றியுள்ளார். குறிப்பாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதில் இருந்து மத்திய அரசை தடுப்பது யார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Who is stopping you? Reclaim it if you can’: J-K CM Omar Abdullah on S Jaishankar’s PoK remarks
லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், "சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதி மீட்கப்படும் போது காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படும்" என்று கூறினார்.
கடந்த வியாழக்கிழமை நடந்த சட்டமன்ற கூட்டத்தில், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் பணியில் இருந்து உங்களை தடுப்பது யார்?" என ஓமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார்.
"ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது. அதை மீட்டெடுக்க வேண்டாம் என்று நாங்கள் எப்போதாவது கூறியிருக்கிறோமா? உங்களால் முடிந்தால் அதை மீட்டெடுக்கவும்" என்று அவர் கூறினார்.
மேலும், "கார்கில் போரின் போது அது மீட்கப்பட்டிருக்கலாம். அப்போது செய்ய முடியாதது பரவாயில்லை. ஆனால் இன்று அதை மீட்டெடுக்க முடிந்தால், அதைத் திரும்பப் பெற வேண்டாம் என்று நம்மில் யார் கூறுவார்கள்?" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு பகுதி சீனாவிடம் உள்ளது. அந்தப் பகுதியைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"நீங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியை மீட்டெடுக்கும் போது, சீனாவிடம் இருக்கும் காஷ்மீரின் பகுதியையும் மீட்டெடுத்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்" என அவர் தெரிவித்தார்.
சட்டசபையில் துணைநிலை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை முடித்த அப்துல்லா, கடந்த டோக்ரா ஆட்சியாளர் மகாராஜா ஹரி சிங்கின் பாரம்பரியத்தை பா.ஜ.க அழித்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
2019 ஆம் ஆண்டில் அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு என்ன முன்னேற்றம் ஏற்பட்டது என்று பா.ஜ.க-விடம் ஓமர் அப்துல்லா கேள்வி எழுப்பினார். இந்த நடவடிக்கை, தீவிரவாதம் அல்லது ஊழலை முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், 2019-க்கு முன்பே தீவிரவாதம் இல்லாத ஜம்மு, ரியாசி போன்ற பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் அவர் கூறினார்.
- Arun Sharma
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.