கடந்த சில தினங்களுக்கு முன்பு, காஷ்மீர் பகுதியில் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கைது செய்திருக்கிறார்கள் பாதுகாப்புப் படையினர். அதன் விளைவாக காஷ்மீர் சமவெளி எங்கும் போராட்டங்களும் சிறிய அளவில் வன்முறைகளிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
அசியா அந்ரபி என்ற அப்பெண்ணின் கைதினை தண்டிக்கும் வகையில், பிரிவினைவாத இயக்கங்கள் இன்று ஒரு நாள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தது.
ஹவூரா மற்றும் மிஷ்பூரா கிராமங்களில் இருக்கும் சில முக்கிய நபர்களை கைது செய்வதற்காக சென்றுள்ளனர் பாதுகாப்பு படையினர். அவர்களின் வருகையை எதிர்க்கும் விதமாக பொதுமக்கள் அவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர்.
இதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றா போது அவர்களில் 3 பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
ஷகீர் அகமது (22), இஷ்ரத் அகமது (20) மற்றும் அதலீப் என்னும் 16 வயது பெண்ணும் இறந்துவிட்டனர்.
இன்றைய முழு அடைப்பினைத் தொடர்ந்து நாளையும் கடைகள் மற்றும் இதர நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என்று தெரியவருகிறது.
ஹிஜ்புல் முஜாஹிதீன் இயக்கத் தலைவர் புர்ஹான் முசாபர் வானி அவரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியைத் தொடர்ந்து இம்முடிவிற்கு வந்துள்ளனர் காஷ்மீர் மக்கள்.
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியினை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பினை போட்டிருக்கிறார்கள் ராணுவத்தினர். எங்கும் பேரணிகளோ, போராட்டங்களோ நடைபெற இயலாத வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புர்ஹான் வானியின் சொந்த ஊரான ட்ரால் பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.