டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த வன்முறையில் காயமடைந்த ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ், பல்கலைக்கழகம் நேற்று ஒரு திட்டமிட்ட தாக்குதலை சந்தித்ததாகக் கூறினார்.
அய்ஷி கோஷ் காயமடைந்த தலையில் கட்டுடன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். “இது ஒரு திட்டமிடப்பட்ட அமைப்பாக்கப்பட்ட தாக்குதல். அவர்கள் மாணவர்களை தனிமைப்படுத்தி தாக்கினர். ஜே.என்.யு பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் வன்முறைக்கும் இடையே ஒரு தெளிவான தொடர்பு உள்ளது. வன்முறையைத் தடுக்க அவர்கள் தலையிடவில்லை” என்று அய்ஷி கோஷ் கூறினார்.
தொடர்ந்து பேசிய அய்ஷி கோஷ், “கடந்த சில நாட்களாக பல்கலைக்கழகத்தில் வன்முறையைத் தூண்டும் முயற்சிகள் நடந்து வருவதாக” கூறினார்.
“கடந்த நான்கு-ஐந்து நாட்களாக, ஆர்எஸ்எஸ்-உடன் இணைந்த சில பேராசிரியர்கள் எங்கள் இயக்கத்தை உடைக்க வன்முறையை ஊக்குவித்தனர். ஆனால், நாங்கள் வன்முறையை நம்பவில்லை. எங்கள் எதிர்ப்பு ஜனநாயக வழிமுறைகள் வழியாகும். ஞாயிற்றுக்கிழமை காலை, வளாகத்திற்குள் ஏபிவிபி உறுப்பினர்களால் சில மாணவர்கள் தாக்கப்பட்டனர். அப்போது, நான் தனிப்பட்ட முறையில் போலீஸ் அதிகாரிகளுடன் பேசினேன். நாங்கள் கவலைப்பட தேவையில்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் ஜே.என்.யு மற்றும் டெல்லி காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்பது தவறா?” என்று கோஷ் கூறினார்.
துணைவேந்தர் மாமிடலா ஜெகதேஷ்குமாரை உடனடியாக நீக்க வேண்டும் என்று மாணவர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை வன்முறைக்கு சில கிளர்ச்சியூட்டும் மாணவர்கள் வன்முறையாளர்களாக மாறுகிறார்கள் என்று துணைவேந்தர் குற்றம் சாட்டினர்.
ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளிடமிருந்து ஜே.என்.யு ஆதரவைப் பெற்றதாகவும், ஜே.என்.யுவின் சக்தி உடைக்கப்படாது என்றும் கோஷ் கூறினார்.
தொடர்ந்து, அய்ஷி கோஷ் கூறுகையில், “நான் ஜே.என்.யுவைச் சேர்ந்தவள் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன். கடந்த 50 ஆண்டுகளாக கல்லூரி இருக்கும் வழியே இருக்கும் என்று ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களிடம் நான் கூற விரும்புகிறேன். அவர்களின் கொடூரமான தந்திரோபாயங்கள் ஒருபோதும் ஜே.என்.யுவில் இடம் பெறாது” என்று கூறினார்.
டெல்லி ஜே.என்.யு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முகமூடி அணிந்த கும்பல், தடி, சுத்தியல்களுடன் நடத்திய தாக்குதலில் 35 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்தனர். டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு திங்கள்கிழமை அடையாளம் தெரியாத நபர்கள் மீது கலவரம் மற்றும் சொத்துக்களை சேதம் செய்ததாக வழக்கு பதிவு செய்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை காலை லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜலுடன் பேசினார். வன்முறை தொடர்பாக ஜே.என்.யு பிரதிநிதிகளுடன் பேசும்படி அவருக்கு உத்தரவிட்டார்.