டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) முகமூடி அணிந்த கும்பல் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தாக்குதலில் ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உள்ளிட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலின் பின்னணியில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) உறுப்பினர்கள் இருப்பதாக ஜே.என்.யு. மாணவர் சங்கம் கூறியுள்ளது. பல்கலைக்கழகத்தின் சில ஆசிரியர்கள், வன்முறை கும்பல் மாணவர்களையும் ஆசிரியர்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர்.
“போலீசார் முன்னிலையிலேயே ஏபிவிபி-யினர் தடிகள், இரும்பு கம்பிகள், சுத்தியல்களை எடுத்துக்கொண்டு முகங்களை முகமூடி அணிந்து மறைத்துக்கொண்டு சுற்றி வருகின்றனர். அவர்கள் செங்கற்களை வீசுகிறார்கள். சுவர்கள் மீது விடுதிகளில் உள்ள மாணவர்களை அடிக்கிறார்கள். இந்த தாக்குதலில் பல ஆசிரியர்களும் மாணவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் கொடூரமாக தாக்கப்பட்டு அவரது தலையில் மிகவும் மோசமாக இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் அவர்களின் குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கும்போது மாணவர்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர். சங்கி பேராசிரியர்களிடமிருந்து உத்தரவுகளை பெற்று மாணவர்கள் பாரத் மாதா கி ஜெய் கோஷங்களை உச்சரிக்க கட்டாயப்படுத்துகிறார்கள்!” என்று ஜே.என்.யு. மாணவர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை ஏபிவிபி மறுத்துள்ளது. “மாணவர்கள் ஏ.எஃப்.எஸ்.ஐ, ஏ.ஐ.எஸ்.ஏ., டி.எஸ்.எஃப் மாணவர்களால் தாக்கப்பட்டனர். குறைந்தது 15 மாணவர்கள் காயமடைந்தனர்” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜே.என்.யு.வில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, ஜே.என்.யு.வின் முன்னாள் மாணவர் தலைவர் ஷெஹ்லா ரஷீத், பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் குறிப்பிட்டு, “அன்புள்ள உங்கள் ஏபிவிபி குண்டர்கள் ஜே.என்.யு.வில் உள்ள மாணவர் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அலுவலக பொறுப்பாளர்களை தாக்குகிறார்கள். உங்கள் கட்சிக்கு அவமானம் ஏதாவது எஞ்சியிருக்கிறதா?” என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
I am so shocked to know abt the violence at JNU. Students attacked brutally. Police shud immediately stop violence and restore peace. How will the country progress if our students will not be safe inside univ campus?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 5, 2020
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜே.என்.யு. வன்முறை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார். “ஜே.என்.யு.வில் நடந்த வன்முறையை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைகிறேன். மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். போலீசார் உடனடியாக வன்முறையை நிறுத்தி அமைதியை மீட்டெடுக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நமது மாணவர்கள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் நாடு எவ்வாறு முன்னேறும்?” என்று அவர் டுவிட் செய்துள்ளார்.
ஜே.என்.யு. வன்முறையின் வீடியோவை டுவிட் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, “சட்டத்தை அமல்படுத்தியவர்கள் முகமூடி அணிந்தவர்கள் ஜே.என்.யு-வுக்குள் நுழைந்தனர். இந்த வீடியோ தான் ஆர்.எஸ்.எஸ் / பி.ஜே.பி இந்தியாவை மாற்ற விரும்புகிறது, அவர்கள் வெற்றிபெற அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று டுவிட் செய்துள்ளார்.
ஏபிவிபி உறுப்பினர்களை நக்சலைட்டுகல் தாக்கியுள்ளனர் என்று ஏபிவிபி ஜேஎன்யு பிரிவு தலைவர் துர்கேஷ்குமார் தெரிவித்தார்.
“புதிய செமஸ்டருக்கான பதிவுகளின் கடைசி நாள் இன்று. இந்த நக்சலைட்டுகள் கடந்த மூன்று நாட்களாக இணையத்தை மூடியிருந்தனர். நீங்கள் பதிவு செய்ய விரும்பவில்லை என்றால், வேண்டாம், ஆனால் குறைந்தபட்சம் விரும்புவோரை அனுமதிக்கவும். எங்களுடைய ஐம்பது பணியாளர்கள் நிர்வாகத் தொகுதியிலிருந்து துரத்தப்பட்டு 1,000 நக்சல்களால் தாக்கப்பட்டனர். அவர்கள் சபர்மதி மற்றும் பெரியார் விடுதிக்குள் நுழைந்து எங்கள் பணியாளர்களைத் தாக்கினர். எங்கள் உறுப்பினர்கள் பலர் எய்ம்ஸ் மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் உறுப்பினர்கள் 11 பேரை அணுக முடியவில்லை. எங்கள் உயிர்ஆபத்தில் உள்ளது” என்று துர்கேஷ் குமார் கூறினார்.
யோகேந்திர யாதவ், ஜே.என்.யு செல்லும் அனைத்து சாலைகளும் டெல்லி காவல்துறையால் தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
#WATCH Delhi: Jawaharlal Nehru University Students' Union president & students attacked by people wearing masks on campus. 'What is this? Who are you? Step back, Who are you trying to threaten?... ABVP go back,' can be heard in video. (note: abusive language) pic.twitter.com/gYqBOmA37c
— ANI (@ANI) January 5, 2020
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: முகமூடி குண்டர்களால் ஜே.என்.யு. மாணவர்கள், ஆசிரியர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலர் பலத்த காயமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் தேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாசிஸ்டுகள், நம்முடைய துணிச்சலான மாணவர்களின் குரல்களுக்கு பயப்படுகிறார்கள். ஜே.என்.யுவில் இன்றைய வன்முறை அந்த அச்சத்தின் பிரதிபலிப்பாகும். என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.