/indian-express-tamil/media/media_files/2025/08/19/siddharth-varatharajan-karan-thapar-2025-08-19-19-55-42.jpg)
'தி வயர்' செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மற்றும் மூத்த பத்திரிகையாளர் கரண் தாபர் (இடமிருந்து வலம்). Photograph: (Source: FB/ Wikimedia Commons)
'ஆபரேஷன் சிந்தூர்' பற்றிய ஒரு கட்டுரை தொடர்பாக அசாம் போலீஸால் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பத்திரிகையாளர் மற்றும் 'தி வயர்' செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால கைது பாதுகாப்பு வழங்கிய அதே நாளில், கவுகாத்தி போலீஸின் குற்றப் பிரிவு, சித்தார்த் வரதராஜனுக்கும், அந்த செய்தி நிறுவனத்தின் மற்றொரு மூத்த பத்திரிகையாளர் கரண் தாபருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆகஸ்ட் 12-ம் தேதி, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஸி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மொரிகான் மாவட்ட போலீஸால் இந்திய நியாய சம்ஹிதாவின் (BNS) பிரிவு 152-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், வரதராஜனுக்கு இடைக்கால கைது பாதுகாப்பு வழங்கியது. இந்த பிரிவு 'இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவிக்கும்' செயல்களைக் கையாள்கிறது.
அதே நாளில், கவுகாத்தியில் உள்ள அசாம் போலீஸின் குற்றப் பிரிவு, கவுகாத்தி குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் தொடர்பாக, வரதராஜன் மற்றும் தாபருக்கு தனித்தனியாக சம்மன் அனுப்பியது. ஆகஸ்ட் 22-ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்மனில் அவர்களுக்கு எதிரான வழக்கின் விவரங்கள் இல்லை என்றாலும், இதுவும் பிரிவு 152-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது; இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு அல்லது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்களைப் பரப்புதல்; பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அறிக்கைகள்; மற்றும் கிரிமினல் சதி ஆகிய பிரிவுகளும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த புகார்கள் குறித்த விவரங்களுக்காக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம், கவுகாத்தி இணை காவல் ஆனையர் அன்குர் ஜெயின் மற்றும் டி.சி.பி. குற்றப் பிரிவு கவுகாத்தி ஆகியோரைத் தொடர்பு கொண்டது. ஆனால், அவர்கள் எந்த விவரங்களையும் பகிரவில்லை.
திங்கள்கிழமை இரவு, தாங்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக வரதராஜன் கூறினார். “சம்மனை வழங்கிய காவல் ஆய்வாளருக்கு நாங்கள் விரைவு அஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் வழியாக பதில் அனுப்பியுள்ளோம். அதில், அவரது சம்மன் சட்டத்திற்கு விரோதமானது என்று குறிப்பிட்டுள்ளோம், ஏனெனில் அதில் எஃப்.ஐ.ஆர். நகல் இல்லை, நாங்கள் என்ன குற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது என்ற விவரங்கள் இல்லை, எஃப்.ஐ.ஆரின் தேதியும் கூட இல்லை. நாங்கள் ஏற்கனவே ஒரு எஃப்.ஐ.ஆர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளோம் என்பதையும் அவருக்கு நினைவுபடுத்தியுள்ளோம்” என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
காவல் ஆய்வாளருக்கு அனுப்பிய எழுத்துப்பூர்வ பதிலில், “இந்த விஷயத்தில் மேலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், எஃப்.ஐ.ஆரின் நகலை வழங்குமாறு” அவர் கோரியுள்ளார்.
“இதற்கிடையில், சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைக்கு இணங்க, விசாரணைக்கு உதவ நான் மகிழ்ச்சியடைகிறேன். எஃப்.ஐ.ஆர். நகல் எனக்கு முன்னதாக வழங்கப்பட்டால், நீங்கள் என்னிடம் தொலைநிலை மூலமாகவோ அல்லது எனது சொந்த ஊரான டெல்லியிலோ கூட கேள்வி கேட்கலாம்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'தி வயர்' செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர்களான சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாபர் மீது அசாம் போலீஸின் குற்றப் பிரிவு, இந்திய நியாய சம்ஹிதாவின் (BNS) பிரிவு 152-இன் கீழ் தேசத்துரோக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா (PCI) மற்றும் இந்திய பெண்கள் பத்திரிகையாளர் சங்கம் (Indian Women Press Corps) ஆகியவை அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.