தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தூய இருதய மேல்நிலை பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி, சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இவர் தங்கியிருந்த விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக லாவண்யா தனது மரணப்படுக்கையில் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் விடுதியின் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், பள்ளியில் மாணவியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். லாவண்யா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என கோரி பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்படுகிறது.
இருப்பினும், மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் காரணமில்லை என அரசு தரப்பிலும், பள்ளி நிர்வாகம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தஞ்சை மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்த தேசிய பாஜக சார்பாக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூரில் பள்ளி நிர்வாகத்தால் கட்டாய மத மாற்றத்துக்கு வற்புறுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்த கொண்டது கவலையும் வருத்தமும் அளிக்கிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அமைத்துள்ளார். அவர்கள் சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணை நடத்தி, அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
குழு உறுப்பினர்கள் விவரங்கள்
- சந்தியா ரே, எம்.பி - மத்திய பிரதேசம்
- விஜயசாந்தி - தெலங்கானா
- சித்ரா தாய் வாக் - மகாராஷ்டிரா
- கீதா விவேகானந்தா - கர்நாடகா
இதற்கிடையில், தஞ்சை மாணவியின் மரணத்திற்கு கட்டாய மதமாற்றம் காரணமில்லை என்பதை கூறும் வகையில் புதிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. பிரிவுவாத வன்முறையை துண்ட வீடியோ எடிட் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil