/tamil-ie/media/media_files/uploads/2018/03/law-ministery.jpg)
ஆர்.சந்திரன்
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் மட்டுமின்றி, நாட்டின் மற்ற பல நீதிமன்றங்களிலும் தேங்கிக் கிடக்கும் ஏராளமான வழக்குகளை விரைந்து முடிக்க, மத்திய அரசு புதிய யுக்தி ஒன்றைத் தொடங்க உள்ளது. இதன்படி, எப்போதும் நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள் போல, நீதிமன்றங்களில் தினமும் கையாளப்படும் வழக்குகளின் எண்ணிக்கை, பாக்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை, இதனால், அதிக வழக்குகளை கையாண்டு, விரைவாக தீர்வு காண்பதில் தேசிய அளவில் எத்தனையாவது இடத்தில் இந்நீதிமன்றம் உள்ளது என்பது போன்ற தகவல்கள் திரையில் காட்சி அளிப்பது போல, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதை "நீதி கடிகாரம்" என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த ஏற்பாடு, நாட்டில் தற்போதுள்ள 24 உயர்நீதிமன்றங்களிலும் விரைவில் தொடங்கப்பட முயற்சிகள் நடந்த வருகின்றன.
விரைவாக நீதி வழங்கப்படுவது அவசியம் என்பதோடு, மலையாக குவியும் வழக்குகளின் எண்ணிக்கை குறித்து மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த ஏற்பாடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீதி கடிகாரத்திற்காக, எல்இடி திரை ஒன்று இந்த நீதிமன்றங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில்தான் இந்த தகவல்கள் - வழக்கின் தீர்ப்பு வெளியாகும் நேரத்தில் எண்ணிக்கை மாறும்படி... ஏற்பாடு செய்யப்பட்டு, ஒருவகையான ஆரோக்கியமான போட்டி உருவாகவும் வகை செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மட்டுமின்றி, நாட்டின் மற்ற நீதிமன்றங்களின் நடப்புகள் குறித்த தகவலை குறிக்கும் வகையிலான நீதி கடிகாரம் ஒன்று தலைநகர் தில்லியில் உள்ள சட்டத்துறை அமைச்சகம் இடம்பெற்றுள்ள ஜெய்சல்மார் ஹவுஸில் கண்சிமிட்டும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி இந்த யோசனையை முன்வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.