டிசம்பர் 2012-ம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டிசம்பர் 2012-இல் பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கும்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி திடீரென மயங்கி விழுந்தார். இதனால், உச்ச நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அவர் சில நிமிடங்களில் மீண்டும் சுயநினைவுக்கு வந்தார். பின்னர், அவர் சக நீதிபதிகள், மற்றும் உச்ச நீதிமன்ற பணியாளர்களால் அவருடைய வளாக அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இது குறித்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அவர் அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் மருந்து எடுத்துக்கொண்டதாக டாக்டர்கள் கூறியதாக தெரிவித்தார்.
இதனிடையே, டிசம்பர் 2012 கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நான்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, குடியரசுத் தலைவர் தனது கருணை மனுவை நிராகரித்ததை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், வினய் சர்மா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்ததுடன், அவர் முற்றிலும் நல்ல நிலையில் உள்ளவர் என்று அவரது மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்றும் தெரிவித்தனர்.
மரண தண்டனை குற்றவாளி அளித்த கருணை மனுவை நிராகரிப்பது குறித்து நீதித்துறை மறுஆய்வு செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.