காரைக்கால், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும், ஆராய்ச்சி நிலையம், ஐதராபாத்தில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற வைர விழா நெல் ஆராய்ச்சியாளர்கள் கூட்டத்தில் அகில இந்திய அளவில் சிறந்த நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கான விருது உட்பட ஏழு விருதுகளை தட்டிச் சென்றது.இவ்வாண்டிற்கான தேசிய அளவிலான நெல் ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூட்டம் ஹைதராபாத்தில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
வைர விழா கூட்டத்தில் இந்தியாவிலிருந்து 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு நெல்லில் உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவின் பல்வேறு சூழல் மண்டலங்களில் நடைமுறைப்படுத்தி அதன்மூலம் புதிய ரகங்களின் தேர்வு மற்றும் சிறந்த தொழில்நுட்பங்களை கண்டறிந்து நெல் உற்பத்தியில் தன்னிறைவு விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளை விவாதிப்பது இந்த ஆய்வுக்கு கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் புதிய ரகங்களை பரிசோதித்தல், ஒற்றை நாற்று முறை போன்ற புதிய தொழில்நுட்ப சாகுபடி முறைகளை மேம்படுத்துதல், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு யுக்திகள், உர மேலாண்மை, பயிர் இனப்பெருக்கமுறை மூலம் உயிர்சத்து அதிகரித்தல் போன்ற பல்வேறு தொழில்நுட்பம் பற்றிய ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் கலந்துரையாடி அதிலிருந்து சிறந்த தொழில்நுட்பங்களை கண்டறிவார்கள்.
ஆய்வுகள் மேற்கொண்ட விதம், எண்ணிக்கை, துல்லிய தன்மை போன்ற பல்வேறு கூறுகளைக் கொண்டு, ஆண்டுதோறும் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் 14 விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு காரைக்கால் வேளாண் கல்லூரி சிறந்த ஆராய்ச்சி நிலையத்திற்கான விருது உட்பட ஏழு விருதுகளை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கான விருதினை தலைமை இயக்குநர் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ புஷ்பராஜ் , துணை தலைமை இயக்குனர் (பயிர் அறிவியல்) முனைவர். டி கே யாதவ் மற்றும் இந்திய நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் முனைவர் R.M.சுந்தரம் ஆகியோரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, கல்லூரியின் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை பேராசிரியர் முனைவர் திருமேனி தேர்வு செய்யப்பட்டார். மேலும் உழவியல், மண்ணியல், மரபியல், பூச்சியில் மற்றும் இனப்பெருக்கம் மற்றும் பயிர் வினையியல் போன்ற துறைகளில் சிறந்த நெல் ஆராய்ச்சிக்கான விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், இக்கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சிறந்த பங்களிப்பினால் இந்த விருதுகள் கல்லூரிக்கு கிடைத்துள்ளது. இந்த தருணத்தில் அனைத்து விஞ்ஞானிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த மாணவச் செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனமானது நமது கல்லூரியுடன் புரிந்துணர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு பல்வேறு ஆராய்ச்சி பணிகளை நெற்பயிரில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் நெல் விவசாயிகள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நெல் உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் இடுபொருட்களுடன் கூடிய தொழில்நுட்பத்தினை வழங்கி வருகிறது. இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் தமிழகத்தின் உள்ள சுமார் 1000 விவசாயிகளுக்கு மேல் பயனடைந்துள்ளனர் என்பதை தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - காரைக்கால்.