இலங்கை அரசின் தொடர் துப்பாக்கிச்சூடு மற்றும் தமிழ்நாட்டு மீனவர்களை காக்க தவறிய மத்திய பாஜக அரசை கண்டித்து காரைக்கால் மீனவர்கள், பெண்கள் தண்டவாளத்தில் படுத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 3 மீனவர்கள் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில்,காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இன்று 7வது நாள் போராட்டமாக, காரைக்கால் ரயில் நிலையத்தில், வேளாங்கண்ணி ரயில் முன்பு மீனவர்கள் குடும்பத்தோடு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தங்களது கோரிக்கைகளுக்கு இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காததால் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள், தங்களது குடும்பத்தினருடன் காரைக்கால் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.