கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி சார்பில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமித் ஷா இருந்ததாக முதல்வர் எடியூரப்பா பேசியதாக உள்ள வீடியோவால், கர்நாடக அரசியலில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணியிலான குமாரசாமி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் குமாரசாமி ஆட்சியின் மீது அதிருப்தி தெரிவித்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து, சபாநாயகர் அவர்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். குமாரசாமி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், ஆட்சி கவிழ்ந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரை, மும்பையில் தங்கி இருக்குமாறு கட்சி தேசிய தலைவர் அமித் ஷா உத்தரவிட்டிருப்பதாக தற்போதைய முதல்வர் எடியூரப்பா பேசிய வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனநாயக படுகொலை : இந்த வீடியோ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முன்னாள் முதல்வரும் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமைய்யா கூறியதாவது, எடியூரப்பா மற்றும் அமித் ஷா, இந்திய அரசியலமைப்பு சட்டவிதிகளை மீறி, ஜனநாயக படுகொலை செய்துள்ளனர். இதன்காரணமாக, முதல்வர் எடியூரப்பா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தங்கள் பதவிகளை வகிக்க தகுதியற்றவர்கள் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆதாரமாக ஒப்படைப்போம் : காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் இதுதொடர்பாக கூறியதாவது, இந்த வீடியோ ஆதாரத்தை, உச்சநீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளோம். அதிருப்தி எம்ஏல்ஏக்களின் பின்னணியில் பா.ஜ. இருப்பதாக காங்கிரஸ் கட்சி அப்போதே கூறியது. தற்போது அந்த உண்மை வெளியாகியுள்ளதாக அவர் கூறினார்.
தீர்ப்பு மக்களின் கையில் - குமாரசாமி : பா.ஜ. அதிகாரம் மற்றும் பணபலத்தை பயன்படுத்தி கர்நாடகாவில் ஆட்சி அமைத்துள்ளது தற்போது புலனாகியுள்ளது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். மீண்டும் இங்கு யார் ஆட்சி என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.