Karnataka Verdict Today: கர்நாடக மாநில அரசியல் விவகாரம், உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களது ராஜினாமாவை ஏற்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடமுடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் 15 பேர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று (ஜூலை 17) தீர்ப்பு வழங்கியது. இதில், சபாநாயகருக்கு தாங்கள் உத்தரவிட முடியாது. ராஜினாமாவை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. நாளை (18ம் தேதி) நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அதிருப்தி எம்எல்ஏ.,க்களை கட்டாயப்படுத்த முடியாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில், அரசியலமைப்பு சட்டத்தின்படி சமநிலையை காக்கும்பொருட்டு அதனடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து மாற்றுக்கருத்துகள் இருப்பின் உரியநேரத்தில் அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமாரசாமி ஆட்சியை இழப்பார் : நாளை நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் குமாரசாமி தோல்வியடைந்து ஆட்சியை இழப்பார் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். நாளை, என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
சபாநாயகர் ரமேஷ்குமார்: வரவேற்கத்தக்க வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா விவகாரத்தில் அரசியலமைப்பை மீறி முடிவெடுக்க மாட்டேன். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் எனது பொறுப்பு அதிகரித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் நம்பிக்கையை காப்பாற்ற நான் முயற்சிப்பேன் என்றார்.
அதிருப்தி எம்எல்ஏக்கள் ஒருமித்த கருத்து : மும்பை ஓட்டலில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் தீர்ப்பு குறித்து கூறியதாவது, நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒருமித்த கருத்தை உருவாக்கியுள்ளோம். அதன்படி, சட்டசபை நிகழ்வுகளில் கலந்துகொள்ளபோவதில்லை என்று கூறினர்.
கருத்து கூற எடியூரப்பா மறுப்பு : உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து கூற எடியூரப்பா மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, முதல்வர் குமாரசாமி, முதல்வர் பதவிக்கான தார்மீக பொறுப்பை இழந்துவிட்டார். அவர் நாளைக்குள், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
சிருங்கேரியில் குமாரசாமி : அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், முதல்வர் குமாரசாமி, சிருங்கேரியில் உள்ள சங்கரமடத்தில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.
நாளை நடக்குமா நம்பிக்கை வாக்கெடுப்பு : அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது, அதேபோன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்களை கலந்துகொள்ள அவர்களை நிர்ப்பந்திக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், முதல்வர் குமாரசாமி, நாளை நடக்க இருந்த நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போட வாய்ப்புள்ளதாக கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
karnataka, yeddyurappa, cricket
இது எடியூரப்பா கிரிக்கெட் : கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில், பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் எடியூரப்பா, தனது சகாக்களுடன் கிரிக்கெட் விளையாடிய போட்டோ, வைரலாகி வருகிறது.