Advertisment

கர்நாடக வறட்சி நிவாரண விவகாரம்: மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே போட்டி வேண்டாம் – உச்ச நீதிமன்றம்

கர்நாடக வறட்சி நிவாரணம்: நிதி விவகாரம் தொடர்பாக பல்வேறு மாநிலங்கள் நீதிமன்றத்தை நாடுகின்றன; மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே போட்டி வேண்டாம் – உச்ச நீதிமன்றம் கருத்து

author-image
WebDesk
New Update
siddharamaiya karnataka

கர்நாடகா முதல்வர் சித்தராமையா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ananthakrishnan G 

Advertisment

உச்ச நீதிமன்றம் திங்களன்று மத்திய மற்றும் மாநில அரசுகள் "போட்டியிடுவதில்" இருந்து விலகியிருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது, மேலும் நிதி வழங்கல் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக நிவாரணம் கோரி பல்வேறு மாநில அரசுகள் நீதிமன்றத்தை அணுகி வருவதாகக் குறிப்பிட்டது.

ஆங்கிலத்தில் படிக்க: Karnataka drought relief: Let there not be a (Centre-state) contest, states coming to court, says SC

வறட்சி மேலாண்மைக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) நிதியுதவி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய கர்நாடக அரசின் மனுவை நீதிபதிகள் பி.ஆர் கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் மாறிமாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, "ஒரு போட்டி இருக்க வேண்டாம்," என்று நீதிபதி கவாய் கூறினார்.

வறட்சி மேலாண்மைக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கவில்லை என கர்நாடக அரசு குற்றம்சாட்டியுள்ளது. அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழு (IMCT) அறிக்கையைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் NDRF உதவியை வழங்குவது குறித்து மத்திய அரசு இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்று கபில் சிபல் உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன் கூறினார். கர்நாடகாவைப் பொறுத்தவரை, இந்த காலம் டிசம்பர் 2023 இல் முடிவடைந்தது, ஆனால் நிதியுதவி எதுவும் வரவில்லை என்று கபில் சிபில் சமர்ப்பித்தார்.

நீதிமன்றத்தை அணுகுவதற்குப் பதிலாக, மாநிலத்தைச் சேர்ந்த யாராவது மத்திய அரசிடம் பேசி இருந்தால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என்று துஷார் மேத்தா கூறினார். லோக்சபா தேர்தலுக்கு முன், மனு தாக்கல் செய்யப்பட்ட நேரத்தையும் கேள்வி எழுப்பிய துஷார் மேத்தா, நோட்டீஸ் வழங்க வேண்டாம் என்று நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

நிதி வழங்குவது தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக நிவாரணம் கோரி பல மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகி வருவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

"அது ஏன் என்று நான் சொல்ல விரும்பவில்லை, ஆனால் இது வளர்ந்து வரும் போக்கு..." என்று துஷார் மேத்தா பதிலளித்தார்.

துஷார் மேத்தா மற்றும் அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி ஆகியோர் இந்த விவகாரம் குறித்த அறிவுறுத்தல்களுடன் மீண்டும் நீதிமன்றத்திற்கு வர ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு பிறகு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதற்கிடையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, உச்சநீதிமன்றத்தில் "தவறான தகவல்களை" மத்திய அரசு சமர்ப்பிப்பதாக குற்றம் சாட்டினார். “இன்றைய விசாரணையின் போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வறட்சி நிவாரணம் தாமதமானதற்கு கர்நாடக அரசுதான் காரணம் என்றும், அதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் வாதிட்டார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று சித்தராமையா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“கடந்த இரண்டு-மூன்று மாதங்களில் நான் பலமுறை கூறியது போல, எங்கள் (கர்நாடகா) அரசாங்கம் செப்டம்பர் 2023 இல் மத்திய அரசிடம், இழப்பு விவரங்கள் மற்றும் வறட்சிக்கான எதிர்பார்க்கப்படும் நிவாரணத் தொகை உள்ளிட்ட ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தது. அதன்பிறகு, நானும், வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடாவும் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட்டோம். நமது துணை முதலமைச்சரும் தனியாக மத்திய நிதி அமைச்சரை சந்தித்திருந்தார். இருந்தும் மத்திய நிதியமைச்சரும், உள்துறை அமைச்சரும் வெட்கமின்றி கர்நாடக அரசு கோரிக்கையை சமர்ப்பிப்பதில் காலதாமதம் செய்து வருவதாக தொடர்ந்து பொய்யாக கூறி வருகின்றனர். இன்று, உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசு இந்தப் பொய்யை மீண்டும் கூறியுள்ளது,'' என்று சித்தராமையா கூறினார்.

வறட்சி நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு இழைத்துள்ள அநீதிக்கு எதிரான எங்களது போராட்டம் தெருக்களில் மட்டுமின்றி நீதிமன்றங்களிலும் தொடரும். மத்திய அரசின் பொய்களை ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தி, அதன் உண்மை முகத்தை மாநில மக்களுக்கு வெளிப்படுத்துவோம்,'' என்றும் சித்தராமையா கூறினார்.

முன்னதாக, பேரிடர் மேலாண்மைக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை எனக் கூறி தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

கேரள அரசும், மத்திய அரசு கடன் வாங்கும் வரம்பை குறைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. தற்காலிக நிவாரணம் எதையும் பெறத் தவறிய போதிலும், உச்ச நீதிமன்றம் கேரள அரசின் மனுவில் இருந்து எழும் சில கேள்விகளை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பியது.

"அரசியலமைப்புச் சட்டத்தின் 293 வது பிரிவு மத்திய அரசு மற்றும்/அல்லது பிற ஆதாரங்களில் இருந்து கடன் பெறுவதற்கு அமலாக்கக்கூடிய உரிமையைக் கொண்ட மாநிலத்திற்கு உள்ளதா" என்பது உட்பட, "அரசியலமைப்புச் சட்டத்தின் விளக்கம் தொடர்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட கணிசமான கேள்விகளை மனு எழுப்புகிறது", "ஆம் எனில், அத்தகைய உரிமையை எந்த அளவிற்கு மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியும்?" என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதில், “அரசியலமைப்புச் சட்டத்தின் 293 (மாநிலங்களின் கடன் வாங்கும் அதிகாரங்களைக் கையாள்வது) இதுவரை, இந்த நீதிமன்றத்தின் எந்த அதிகாரபூர்வமான விளக்கத்துக்கும் உட்பட்டதாக இருக்கவில்லை என்பதால், நாங்கள் கருதும் கருத்தில், மேற்கூறிய கேள்விகள் அரசியலமைப்பின் பிரிவு 145(3) இன் வரம்பிற்குள் முழுமையாக அடங்கும்.” தவிர, "நமது அரசியலமைப்பில் உட்பொதிக்கப்பட்டுள்ள ஆளுகையின் கூட்டாட்சி கட்டமைப்பை பாதிக்கும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு கேள்விகளையும் இது எழுப்புகிறது" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Supreme Court Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment