Karnataka political news: கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் 16-ம் தேதி வரை எந்த முடிவும் சபாநாயகர் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதனால் கர்நாடக அரசியல் சூறாவளிக்கு தற்காலிக இடைவேளை!
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக ஆளும் கூட்டணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக காய் நகர்த்தி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.
மேற்படி 11 எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் ரமேஷ்குமார் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து 11 எம்.எல்.ஏ.க்களும் ஆஜர் ஆனார்கள். அவர்களில் 8 பேர் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். இந்த எண்ணிக்கை அடிப்படையில், குமாரசாமி அரசு மெஜாரிட்டியை இழக்கும் ஆபத்து உருவானது.
இந்தச் சூழலில் இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சபாநாயகர் அதிகாரம் குறித்து விவாதம் எழுந்தது. அப்போது நீதிமன்றம், ‘சபாநாயகரின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் எந்த கேள்வியும் எழுப்ப கூடாது என நினைக்கிறீர்களா?’ என கேள்வி எழுப்பியது.
அதற்கு சபாநாயகர் ரமேஷ்குமாரின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ‘நிச்சயமாக இல்லை. இரண்டு பேர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க தொடங்கிய பொழுது அவர்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்கள்’ என விளக்கம் அளித்தார். மேலும், ‘எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை தவிர்க்கவே ராஜினாமா நாடகத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க கூடாது’ என வாதிட்டார் அவர்.
எம்.எல்.ஏ.க்கள் தரப்பு வழக்கறிஞர் முகில் ரோஹத்கி, ‘எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது சபாநாயகரின் கடமை. ஆனால் அவர் அதிலிருந்து தவறிவிட்டார். எனவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம்’ என வாதிட்டார்.
தொடர்ந்து அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ‘ஒருவர் ராஜினாமா கடிதத்தை கொடுக்கும் பொழுது அதனை ஆய்வுக்கு உட்படுத்தாமல் சபாநாயகர் முடிவெடுக்க முடியாது. சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி யாரும் ராஜினாமா கொடுக்கவில்லை. எப்படி ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்க முடியும்?’ என கேள்வி எழுப்பினார்.
இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ‘வருகிற 16-ம் தேதி வரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. செவ்வாய்கிழமை வரை கர்நாடகா நிலவரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.