/indian-express-tamil/media/media_files/2025/10/23/rahul-gandhi-3-2025-10-23-06-09-25.jpeg)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆலந்து தொகுதியில் வாக்காளர் நீக்கத்தை 'வாக்கு திருட்டு'க்கு உதாரணமாகக் குறிப்பிட்டிருந்தார்.
2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆலந்த் தொகுதியில் தேர்தல் ஆணையத்திடம் செய்யப்பட்ட ஒவ்வொரு மோசடி வாக்காளர் நீக்க விண்ணப்பத்திற்கும் ஒரு தரவு மைய இயக்குநருக்கு ரூ.80 செலுத்தப்பட்டுள்ளது என்று இந்த வழக்கைப் விசாரித்து வரும் கர்நாடக காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2022 மற்றும் பிப்ரவரி 2023-க்கு இடையில் இந்தத் தொகுதியில் மொத்தம் 6,018 இத்தகைய போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தமாகச் செலுத்தப்பட்ட தொகை ரூ.4.8 லட்சம் ஆகும்.
ஆலந்த் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய “வாக்குத் திருட்டு” குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் ஆலந்த் தொகுதியில் 2023 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பி.ஆர். பாட்டிலிடம் தோல்வியடைந்த பா.ஜ.க தலைவர் சுபாஷ் குட்டேதாருக்குச் சொந்தமான இடங்களில் எஸ்.ஐ.டி சோதனை நடத்தியது.
ஆலந்த் தொகுதியில் நீக்கக் கோரப்பட்ட பெயர்கள் குறித்துத் தேர்தல் அதிகாரிகளால் நடத்தப்பட்ட கள அளவில் சரிபார்ப்பில், 6,018 விண்ணப்பங்களில், தொகுதியில் வசிக்காத 24 வாக்காளர்கள் மட்டுமே நீக்கப்படத் தகுதியானவர்கள் என்று தெரியவந்தது.
செப்டம்பர் 26-ம் தேதி ஆலந்த் தொகுதி வழக்கின் விசாரணையை ஏற்ற எஸ்.ஐ.டி, கலபுர்கி மாவட்டத் தலைமையகத்தில் அமைந்துள்ள ஒரு தரவு மையத்தை மையமாகக் கொண்டு விசாரித்து வருகிறது. அங்கிருந்துதான் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நீக்கங்கள் பிப்ரவரி 2023-ல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் உள்ளூர் காவல்துறையாலும், அதன்பின்னர் சி.ஐ.டி இணைய குற்றப் பிரிவு அலகு மூலமாகவும் நடத்தப்பட்ட விசாரணைகள், உள்ளூர் வாசியான முகமது அஷ்ஃபாக் என்பவரின் ஈடுபாட்டைச் சுட்டிக்காட்டுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
2023-ல் விசாரிக்கப்பட்டபோது, அஷ்ஃபாக் தான் நிரபராதி என்று கூறி, தன்னிடமுள்ள மின்னணுக் கருவிகளை ஒப்படைப்பதாக உறுதியளித்த பின்னர் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு, அவர் துபாய்க்குச் சென்றுவிட்டார்.
தற்போது, அஷ்ஃபாக் மற்றும் அவரது கூட்டாளியான முகமது அக்ரம் அத்துடன் மேலும் மூன்று பேருடன் இணைய அழைப்புகள் மூலம் தொடர்பில் இருந்தார் என்பதை, அவரது சாதனங்கள் மற்றும் இணைய நெறிமுறை விவரப் பதிவுகளைப் பார்த்து எஸ்.ஐ.டி கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம், எஸ்.ஐ.டி இந்த நால்வருக்கும் சொந்தமான இடங்களில் சோதனைகளை நடத்தியது. சோதனையின் போது, கலபுர்கி பிராந்தியத்தில் வாக்காளர் பட்டியல் கையாளுதலுக்காக ஒரு தரவு மையம் செயல்பட்டதை நிறுவுவதற்கான ஆவணங்கள் மற்றும் ஒவ்வொரு நீக்கத்திற்கும் ரூ.80 பணம் செலுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தரவு மையம் முகமது அக்ரம் மற்றும் அஷ்ஃபாக் ஆகியோரால் இயக்கப்பட்டது என்றும், மற்றவர்கள் தரவு உள்ளீட்டாளர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விண்ணப்பங்களைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட ஒரு லேப்டாப் உட்பட முக்கியமான கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தக் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து, அக்டோபர் 17-ம் தேதி பா.ஜ.க தலைவர் குட்டேதார், அவரது மகன்கள் ஹர்ஷானந்தா மற்றும் சந்தோஷ், மற்றும் அவர்களின் பட்டயக் கணக்காளர் மல்லிகார்ஜுன் மகந்தாகோல் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் எஸ்.ஐ.டி சோதனை நடத்தியது. இதில் 7-க்கும் மேற்பட்ட லேப்டாப்களுடன் மொபைல் ஃபோன்களையும் கைப்பற்றியதாக எ.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்தனர். பணம் செலுத்தப்பட்டதற்கான ஆதாரம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆலந்த் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் மாற்றங்களைக் கோர, கோழிப் பண்ணைத் தொழிலாளி முதல் காவல்துறை உறவினர்கள் வரை பலருக்கும் சொந்தமான 75 மொபைல் எண்கள் மூலம் தேர்தல் ஆணைய போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலித் தகவல்களைப் பயன்படுத்தி, வாக்காளர் நீக்கக் கோரிக்கைகளைச் செய்யத் தேர்தல் ஆணையத்தின் போர்ட்டலுக்குள் எவ்வாறு அணுகலைப் பெற்றார்கள் என்பதை எஸ்.ஐ.டி இன்னும் தீர்மானிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் போர்ட்டலை அணுகப் பயன்படுத்தியவர்களின் சான்றுகளோ அல்லது யாருக்காக விண்ணப்பங்கள் செய்யப்பட்டதோ, யாருக்கும் இதுபற்றித் தெரியாது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆலந்த் தொகுதியில் நான்கு முறை எம்.எல்.ஏ-வான குட்டேதார், வாக்காளர் நீக்க முயற்சிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார். மேலும், 2023-ல் அத்தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரஸின் பி.ஆர். பாட்டீல் தனிப்பட்ட ஆதாயத்திற்காகவே இந்த குற்றச்சாட்டுகளைக் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாட்டீல் அமைச்சர் ஆக விரும்புவதாகவும், குற்றச்சாட்டுகளைக் கூறி ராகுல் காந்தியுடன் சாதகமான உறவை வளர்க்க விரும்புவதாகவும் குட்டேதார் கூறியுள்ளார்.
எஸ்.ஐ.டி-யின் கண்டுபிடிப்புகள் குறித்துக் காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் பவன் கேராவிடம் கேட்டபோது: "பா.ஜ.க ஆட்சியில், வாக்களிக்கும் புனிதமான உரிமை ஒரு பொருளாகக் குறைக்கப்பட்டுள்ளது — அது ஒரு நபருக்கு வெறும் ரூ.80-க்கு இடைநிறுத்தப்படுகிறது. இது இந்த அரசுக்கு ஒரு அவமானம்” என்று கூறினார்.
வாக்காளர் நீக்கங்கள் தற்செயலானவை அல்ல என்றும், "இந்த பைத்தியக்காரத்தனத்திற்கு ஒரு முறை உள்ளது" என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை இந்த விசாரணை நிரூபித்துள்ளது என்றும் கேரா கூறினார். “வாக்குத் திருட்டு என்பது விபத்து அல்ல, ஆனால் எங்கள் தேர்தல்களை மோசடி செய்ய வடிவமைக்கப்பட்ட, மத்திய அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட, நன்கு நிதியளிக்கப்பட்ட ஒரு மோசடி என்பதை எஸ்.ஐ.டி-யின் கண்டுபிடிப்புகள் இப்போது உறுதிப்படுத்துகின்றன. நாம் மேற்பரப்பைக் தோண்டத் தோண்ட, இந்த மோசடி மேலும் அம்பலமாகிறது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us