கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான 54 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது.
இதில் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன்மூலம் அவரும் அவரது நிறுவனம் பயனடைந்ததாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டின. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி அறிவித்திருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அவருக்கு சொந்தமான ரூ 54 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.
இதற்கிடையே கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்தது. பின்னர் இந்த தடையை நவம்பர் 1-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட சொத்துகளில் கார்த்தி சிதம்பரத்தின் டெல்லி இல்லம், இங்கிலாந்தில் உள்ள காட்டேஜ் மற்றும் இல்லம், பார்சிலோனாவில் உள்ள டென்னிஸ் கிளப், தமிழகத்தில் கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் உள்ள சொத்துகள் அடங்குவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
i