Advertisment

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஒரு மணி நேர விசாரணைக்கு பிறகு தீர்ப்பை டெல்லி தனி நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sivagangai seat denied to karthi p.chidambaram- கார்த்தி ப.சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி

sivagangai seat denied to karthi p.chidambaram- கார்த்தி ப.சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஒரு மணி நேர விசாரணைக்கு பிறகு தீர்ப்பை டெல்லி தனி நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Advertisment

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது கடந்த 2011-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதே வழக்கில் அமலாக்கத்துறை 2012-ல் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்தது.

கார்த்தி சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கைது செய்யபட்டார். நேற்று (மார்ச் 23) அந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக அவரது தரப்பில் 2ஜி சார்ந்த ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விசாரிக்கும் டெல்லி தனி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. கார்த்தி சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கோபால் சுப்பிரமணியம், சல்மான் குர்ஷித், மொகித் மாத்தூர் ஆகியோர் ஆஜரானார்கள். கார்த்தியின் தந்தை ப.சிதம்பரம், தாயார் நளினி சிதம்பரம் ஆகியோரும் கருப்பு கோட் அணிந்து வந்திருந்தனர்.

கபில் சிபல் வாதிடுகையில், ‘ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது எந்தப் புகாரும் இல்லை. வெளிநாட்டு முதலீடு மேலாண்மை வாரிய அதிகாரிகளை அவருக்கு தெரியும் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் சிபிஐ காட்டவில்லை. எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்’ என கேட்டார்.

கோபால் சுப்பிரமணியம் வாதிடுகையில், ‘விசாரணை ஏஜன்சிகள் கேட்ட கேள்விகளுக்கு கார்த்தி பதில் அளித்திருக்கிறார். அவர் வெளிநாடு சென்றுவிடுவார் அல்லது ஆதாரங்களை அழித்து விடுவார் என்கிற கேள்விகளுக்கே இடமில்லை’ என்றார்.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில், இந்த முன் ஜாமீன் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய 3 வாரங்கள் அவகாசம் கேட்கப்பட்டது. அதுவரை கார்த்தி சிதம்பரத்திற்கு எவ்வித நிவாரணமும் வழங்கி உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து முன் ஜாமீன் மனு மீதான உத்தரவை நீதிபதி ஓ.பி.சைனி தள்ளிவைத்தார்.

பிற்பகல் 3 மணிக்கு நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கினார். கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், கார்த்தி சிதம்பரத்தை ஏப்ரல் 16-ம் தேதி வரை கைது செய்ய சிபிஐக்கு தடை விதித்துள்ளது. விசாரணைக்கு அதிகாரிகள் அழைத்தால், தவறாமல் ஆஜராகுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நேற்று, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment