1949 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஷேக் அப்துல்லா மற்றும் மூன்று பேர் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளரால் டெல்லி உள்ள அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவர்கள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அது 370வது பிரிவை ஒப்புக்கொள்ள வழிவகுத்தது. (இது அரசியலமைப்பு சபையில் விவாதிக்கப்படும்போது 306ஏ பிரிவாக இருந்தது. என் கோபாலசாமி அய்யங்கார் (இலாகா இல்லாத அமைச்சரவை அமைச்சர் மற்றும் காஷ்மீரின் முன்னாள் திவான்) ஷேக் அப்துல்லா மற்றும் பலர் இடையே பல மாதங்களாக இந்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டன.
முதல் கூட்டம் 1949 ஆம் ஆண்டு மே 15-16 தேதிகளில் சர்தார் வல்லபாய் படேலின் இல்லத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் நடைபெற்றது. ஒரு பரந்த புரிதல் அடையப்பட்டதும் அதன் சுருக்கத்தை அய்யங்கார் நேருவிடம் இருந்து அப்துல்லாவுக்கு அனுப்ப ஒரு வரைவு கடிதத்தை தயாரித்தார். அதை படேலுக்கு ஒரு குறிப்புடன் அனுப்பினார்: “நீங்கள் ஒப்புதல் அளித்ததை ஜவஹர்லால் நேருஜிக்கு நேரடியாகத் தெரியப்படுத்துவீர்களா? உங்கள் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அவர் அந்தக் கடிதத்தை ஷேக் அப்துல்லாவுக்கு வழங்குவார்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இறுதியில் 370வது பிரிவை உருவாக்கிய அய்யங்கார், அக்டோபர் 17, 1949 அன்று அரசியலமைப்பு சபையில் பேசுகையில், “அரசியலமைப்பு சபை என்கிற கருவி மக்களின் விருப்பம், மாநிலங்களின் அரசியலமைப்பு மற்றும் யூனியன் மாநிலத்தின் அதிகார வரம்பு ஆகியவற்றை தீர்மானிக்கும் என்பதை நாம் ஒப்புக்கொண்டுள்ளோம்... இந்த உட்பிரிவுகளில் பல ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் ஒப்புதலுக்காக வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இணைப்பு ஒப்பந்த ஆவணத்தில் இப்போது குறிப்பிடப்படாத விஷயங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அரசியலமைப்பு சபையின் ஒப்புதலைத் தவிர அதில் கூடுதலான மாற்றங்களை செய்யக் கூடாது என்பது காஷ்மீர் அரசாங்கத்துக்கும் காஷ்மீர் மக்களுக்கும் நமது வாக்குறுதிகளில் ஒன்று. அதை நாம் அரசிலமைப்பை வடிவமைப்பதற்கான மாநிலம் என்று அழைக்கலாம்.” என்று கூறினார்.
பின்னர், இந்த பிரிவு அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளை ஜம்மு காஷ்மீருக்கு நீட்டிக்க கூடாது என்று அப்துல்லா வலியுறுத்தினார். ஆனால், அவர் அவற்றை ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க மாநில அரசியலமைப்பு சபைக்கு விட்டு விடுங்கள் என்று கூறினார். அதில் படேலுக்கு மகிழ்ச்சி இல்லை. ஆனால், அய்யங்காரை தொடர அனுமதித்தார். அப்போது வெளிநாட்டில் இருந்த நேருவுக்கு நவம்பர் 3, 1949 அன்று படேல் கடிதம் எழுதினார்: “ஒரு பெரிய விவாதத்திற்குப் பிறகு, நான் <காங்கிரஸ்> கட்சியை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்த முடியும். ” என்று குறிப்பிட்டார். ஷேக் அப்துல்லா அரசியலமைப்பு சபையில் இருந்து விலகுவதாக அச்சுறுத்தியபோது, படேல் நேருவிடம் மீண்டும் அவரை அழையுங்கள் என்று கேட்டார்.
1963 ஆம் ஆண்டு நவம்பரில், நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தின்போது, ஹரி விஷ்ணு காமத் காஷ்மீர் முழுமையாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்று வாதிட்டபோது, நேரு அது உண்மையில் இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்று உறுதி கூறினார். அப்போது அவர் கூறுகையில், “வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பிற இடங்களைப் பொறுத்தவரை இதுபோன்ற சில கட்டுப்பாடுகள் நம்மிடம் உள்ளன என்பதை இந்த சபை நினைவில் கொள்ள வேண்டும். அங்கே வெளியாட்கள் நிலம் வாங்க முடியாது. இது வேறு சில மாவட்டங்களிலும், அசாமின் மலை மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ளது. இது அவர்களைப் பாதுகாப்பதாகும்.” என்று கூறினார்.
மகாராஜா ஹரி சிங்கின் மகனும் முன்னாள் எம்.பி.-யுமான கரண் சிங், ஒரு பரிசோதிக்கப்பட்ட வாழ்க்கை என்ற தனது புத்தக்கத்தில் இவ்வாறு எழுதினார்: “ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை பெற்றிருப்பது வலதுசாரிகளை கோபமடையச் செய்திருக்கிறது என்பது தெரிகிறது. அது என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துகிறது. நாம் ஒரு பெரிய நாடு, நாம் பெரிய மனதுடன் இருக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் சிக்கலான மற்றும் கடினமான சூழ்நிலைகளில்தான் இந்தியாவுக்குள் வந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போது, அது ஏன் சிறப்பு அந்தஸ்தை பெற்றிருக்கிறது என்று கேட்பது குழப்பமானதாகும். இது எப்போதும் சிறப்புடனே இருக்கும். ஏனேன்றால், அது சிறப்பான வரலாற்று நிகழ்வு மற்றும் அடுத்தடுத்த அரசியல் முன்னேற்றங்களால் பிறந்தது அது. இங்கிலாந்தில் அவர்கள் எல்லா வகையான நிர்வாக அமைப்புகளையும் கொண்டிருக்கிறார்கள்... மதத்தை மையமாகக் கொண்டு பிரிவினை இருந்தபோதிலும், முஸ்லிம் பெரும்பான்மை நாடான ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியதால் நாம் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர வேண்டும். நாம் அதை நேசிக்கவும்; அதை மகிழ்விக்கவும்; அதை மதிக்கவும் செய்ய வேண்டும்.” என்று எழுதியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.