காஷ்மீர் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமியை 8 பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கோரச் சம்பவம் இந்தியா முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளாஇ ஆதரித்து அவர்களை உடனே விடுதலை செய்யுமாறு பாஜக அமைச்சர்கள் தேசிய கொடையை வைத்து போராட்டம் நடத்தினார்கள். சிறுமி என்று பாராமல் இரக்கமற்ற மிருகங்கள் போல பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த அமைச்சர்கள் பதவி விலகும் சூழலும் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. இதில் புதிய துணை முதல்வராக பாஜகவின் கவிந்தர் குப்தா பதவி ஏற்றார். பதவியேற்புக்குப் பின், அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அந்தச் சந்திப்பில், கத்துவா சிறுமி பாலியல் குற்றம் குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு அவர், “இது ஒரு சிறிய விஷயம். இதை இவ்வளவு பெரியதாக்க வேண்டாம்.” என்றார். இவ்வாறு இவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பொறுப்பேற்ற முதல் நாளிலே குப்தா இவ்வாறான சர்ச்சை கருத்தைப் பேசியதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்தச் சர்ச்சை கருத்தின் வீடியோவை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் நிஜாமி சமூக ஊடகங்களில் பகிர்ந்தவுடன் அது வைரலானது.
,
சமூக வலைத்தளங்களில் கிளம்பிய எதிர்ப்பால் துணை முதல்வர் கவிந்தர் குப்தா ஊடகங்களை அழைத்து மீண்டும் பேட்டி அளித்தார். அப்போது, “காஷ்மீர் சிறுமி பலாத்காரம் விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதை அடிக்கடி பேசக்கூடாது என்பதற்காகவே அப்படிப் பேசினேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் அப்படிப் பேசவில்லை. இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.