உண்ணாவிரதம் இருந்து வரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திப்பதற்கு பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், சந்திரபாபு நாடு, குமாரசாமி ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
டெல்லியில், மாநில அரசில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இல்லத்தில் அமைச்சர்களுடன் 6-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள, பாஜக அல்லாத முதலமைச்சர்கள் பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி ஆகியோர், அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அவரை சந்திக்க முயன்றனர்.
எனினும், அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து நால்வரும், துணை நிலை ஆளுநரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிதருமாறு கடிதம் அளித்தனர். எனினும், அனுமதி கிடைக்காததால் 4 முதலமைச்சர்களும் துணை நிலை ஆளுநரை சந்திக்கவில்லை.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அரசு கூட்டாட்சி முறையை சிதைத்து வருகிறது என்றார். தொடர்ந்து பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லியில் ஏற்பட்டுள்ள அரசியல்சான நெருக்கடிக்கு பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார்.
அதேநேரத்தில், டெல்லி பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும் வலியுறுத்தினர்.