இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் இணையதள மலையாள செய்தித் தளத்தின் செல்போன் அப்ளிகேஷனை கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ஸ்ரீ ராம்நாத் கோயன்காவின் இதழியலின் தையரியம், உண்மையின் தேடல் என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும், "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" இந்தியாவின் மிகவும் நம்பகமான செய்தி நிறுவனமாகும். இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய இணையதள செய்தி நிறுவனமான இந்நிறுவனம், உலகம் முழுவதும் 75 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
மாகாண மொழிகளில் செய்திகளை வழங்கும் பொருட்டு, யாரும் பார்க்காத கோணத்தில், சாமானிய மக்களின் குரலாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதள செய்தித் தளமான, "இந்தியன் எக்ஸ்பிரஸ் மலையாளம்" கடந்த ஜனவரி மாதத்திலும், "இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்" கடந்த ஏப்ரல் மாதத்திலும் தொடங்கப்பட்டது. ஏற்கனவே, மாராத்தி மொழியில் லோக்சத்தா, ஹிந்தி மொழியில் ஜனசத்தா ஆகிய இணையதள செய்தித் தளத்தை நமது நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் இணையதள மலையாள செய்தித் தளத்தின் செல்போன் அப்ளிகேஷனான #ieMalayalam தொடங்கப்படவுள்ளது. இதனை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்து உரையாடவுள்ளார். IOS மற்றும் ANDROID இயங்குதளத்தில் எளிதாக செய்திகளை இந்த அப்ளிகேஷன் வழங்கும். செய்திகளை சேமித்து வைத்துக் கொண்டு, இணைய சேவை இல்லாத போதும் செய்திகளை உங்களது நேரத்திற்கு ஏற்றாற்போல் படித்து தெரிந்து கொள்ள இந்த அப்ளிகேஷனில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
#ieMalayalam தொடக்க நிகழ்ச்சியில், Kerala@60 என்ற அம்மாநிலத்தின் முக்கிய நபர்களுடன் நடத்தப்பட்ட 60 நேர்காணல் வீடியோவும் வெளியிடப்படவுள்ளது. கேரள முன்னாள் முதல்வர்கள் அச்சுதானந்தம், உம்மன் சாண்டி, நடிகர் மோகன்லால், பாடகி கே.எஸ்.சித்ரா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் இந்த நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.