கேரள கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தொடர்ந்து தீப்பிழம்புகளுடன் காணப்படுவதாகவும், தற்போது கவிழும் நிலையில் இருப்பதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும், இதில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன் 36 இரசாயன கண்டெய்னர்கள் இருப்பதாகவும், அவை வெடித்துச் சிதறுவதாகவும் இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS), கேரள கடற்கரையில் சில கண்டெய்னர்கள் ஒதுங்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலோர காவல்படை வெளியிட்ட தகவலின்படி, கப்பலில் ஏற்பட்டுள்ள தீ மற்றும் வெடிவிபத்துகள் தற்போது கப்பலின் நடுப்பகுதியிலேயே மையமாக உள்ளன. "கப்பலின் முன்பகுதியிலிருந்த தீ தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் அடர்த்தியான புகை தொடர்ந்து வெளியாகிறது. கப்பல் இடதுபுறமாக சுமார் 10 முதல் 15 டிகிரி சாய்ந்துள்ளது. மேலும் பல கண்டெய்னர்கள் கப்பலில் இருந்து கடலில் விழுந்துள்ளன" என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
சமுத்ரா பிரஹாரி மற்றும் சசேத் ஆகிய கடலோர காவல்படை கப்பல்கள் தீயணைப்பு மற்றும் எல்லைப் பகுதிகளை குளிர்விக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மற்றொரு கப்பலான சமர்த், கொச்சியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்றும் கடலோர காவல்படை கூறியுள்ளது.
கொச்சியில் உள்ள பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர், கமாண்டர் அதுல் பிள்ளை கூறுகையில், "கப்பலில் இருந்த 22 ஊழியர்களில், மீட்கப்பட்ட 18 பேர் திங்கள்கிழமை இரவு மங்களூரு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, சிகிச்சைக்காக கப்பல் முகவரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மோசமான சூழ்நிலையிலும், இரண்டு கடலோர காவல்படை கப்பல்கள் தீயை அணைக்கும் பணிக்காக சென்றன. நீர் ஜெட் முனைக்கருவிகளைப் பயன்படுத்தி, குளிர்விக்க முயற்சித்து வருகின்றன. செவ்வாய்க்கிழமை காலை, வான்வழி கண்காணிப்புக்காக ஒரு டார்னியர் விமானம் அனுப்பப்பட்டது. அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
காணாமல் போன ஊழியர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். "கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். சட்லெஜ் (INS Sutlej) சம்பவ இடத்திலேயே உள்ளது. காணாமல் போன நான்கு ஊழியர்களுக்கான தேடுதல் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன. கப்பல் நிறுவனம் ஏற்கனவே ஒரு மீட்பு மாஸ்டரை நியமித்துள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், கண்டெய்னர்களில் இருந்த சரக்குகளின் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, சுற்றுச்சூழல் ரீதியாக ஆபத்தான திரவம் மற்றும் திடப் பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான எளிதில் தீப்பற்றக்கூடிய திரவங்கள் கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், லித்தியம் பேட்டரிகள், நாப்தலீன் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற பொருட்களும் இதில் அடங்கும்.
இதனிடையே, புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் INCOIS, கப்பலில் இருந்து விழுந்த கண்டெய்னர்கள் மற்றும் பிற பொருட்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு தென்-தென்கிழக்கு திசையில் நகரும் என்றும், சில கண்டெய்னர்கள் கோழிக்கோடு மற்றும் கொச்சிக்கு இடையே கேரள கடற்கரையில் ஒதுங்கக்கூடும் என்றும் கணித்துள்ளது.