Kerala Flood : கேரள மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த காரணத்தால் இடுக்கி அணை 26 ஆண்டுகள் கழித்து அதனுடைய முழுக் கொள்ளளவை எட்டியது.
168 மீட்டர் உயரமுள்ள இந்த அணையில் மழை காரணமாக விரைவாக தண்ணீர் நிரம்பியது. இதன் காரணமாக நேற்று மீண்டும் அணையின் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
26 வருடங்களுக்குப் பிறகு இடுக்கி அணையின் மதகுகள் அனைத்தும் நேற்று திறந்திவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து முல்லைப் பெரியாற்றில் நீர் மட்டம் 1-1.5 மீட்டர் வரை உயர்ந்துள்ளது.
மழையின் வரவால் கேரளாவில் இருக்கும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது மழைநீர். வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட பகுதிகளான சூர்னிக்கரா மற்றும் கோம்பநாடு பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
முல்லைப் பெரியார் நதியின் தற்போதைய தோற்றம்
பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவரும் காரணத்தால் மலைப் பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 18 பேர் மரணமடைந்துள்ளதாக கேரள பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.
வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு
மத்திய அரசின் உதவியை நாடிய கேரள அரசு
கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள ராணுவம் மற்றும் கப்பற்படையின் உதவியை நாடியுள்ளார். மேலும் 6 தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் கேரளா விரைந்துள்ளன.
ஆகஸ்ட் 11ம் தேதி ஆலப்புழாவில் இருக்கும் புன்னம்டா ஏரியில் நடைபெற கேரளாவின் பாரம்பரிய விளையாட்டான வல்லம் களி போட்டியினை ரத்து செய்து அறிவித்திருக்கிறார் கேரள முதல்வர்.